25/02/2026
3 ஆண்டு Underground வாழ்க்கை.. முதலில் காங்கிரஸ்.. நல்லக்கண்ணு கம்யூனிஸ்ட்டானது எப்படி? தலைமறைவு வாழ்க்கை முதல் நடைபெற்ற கொடுமைகள் ஏராளம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு இன்று காலமானார். அவருக்கு வயது 101. அவரது உடல் அவரின் விருப்பப்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது. சிறுவனாக இருக்கும் போதே பொது வாழ்க்கைக்கு வந்த நல்லக்கண்ணு முதலில் காங்கிரஸ் கட்சிக்காரர்களுடன் நெருக்கமாக செயல்பட்ட பிறகு கம்யூனிஸ்ட்டானது எப்படி? 3 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தது பற்றியும், அவருக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும் இங்கு பார்க்கலாம்.
நம்முடைய காலத்தில் தமிழகத்தில் எளிமையின் அடையாளமாக வந்த அரசியல் தலைவர் என்றால் அது நல்லக்கண்ணு தான். வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
விடைபெற்றார் நல்லக்கண்ணு
இந்த நிலையில் இன்று காலை முதலே அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.55 மணிக்கு நல்லக்கண்ணு மறைந்தார். நல்லகண்ணு தனது இறப்புக்கு பிறகு உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் பிறந்தவர்
* 1925ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நல்லகண்ணு பிறந்தார். அவரது பிறப்புடன் இந்தியாவின் மற்றொரு முக்கிய நிகழ்வும் ஒத்துப்போனது. அதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஆம், நல்லகண்ணு பிறந்தநாளில் தான் நம் நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.
எளிமையிலும் தாராளம்
* நல்லக்கண்ணு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கான மாதப்படி 2,500 ரூபாயும், ஓய்வுபெற்ற அரசு ஆசிரியரான அவரது மனைவியின் ஓய்வூதியம் 4,500 ரூபாயும் மட்டுமே அவரது வருமானமாக இருந்தது.
* 2007 ம் ஆண்டு வரை, சென்னையில் சிஐடி நகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். அப்போதைய திமுக அரசு வாடகை செலுத்த கோரவில்லை. ஆனாலும் நல்லகண்ணு தவறாமல் வாடகை செலுத்தினார்.
* கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழக அரசு நல்லகண்ணுவுககு 'தகைசால் தமிழர்' விருதையும், 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும் வழங்கி கவுரவித்தது. அந்த பணத்துடன், தனது சொந்த நிதியில் இருந்து மேலும் 5,000 ரூபாயைச் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் திருப்பியளித்தார். இது அவரது எளிமையையும், சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியது.
காங்கிரஸ் டூ கம்யூனிஸ்ட்
* நல்லகண்ணு ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டார். தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரம் நடத்திய சுதேசி இயக்கத்தாலும், கிராமியக் கூட்டங்களில் பாடப்பட்ட பாரதியார் பாடல்களால் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. இருப்பினும் அவரது தொடக்கவாழ்க்கை காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து இருந்தது.
* சிறுவயதிலேயே 1930களில் நடந்த ஹார்வி மில்ஸ் வேலைநிறுத்தத்தின் போது அவரது செயல்பாடுகள் தொடங்கின. மற்ற இளைஞர்களுடன் இணைந்து, வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரிசி சேகரித்து விநியோகித்தார்.
* 12 வயதிலேயே, 1937ம் ஆண்டு மாகாணத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு நல்லகண்ணு பிரசாரங்களில் பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட்டான பின்னணி
* நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், மக்களை ஒடுக்கிய பல நிலப்பிரபுத்துவ ஜமீன்தார்கள் காங்கிரஸில் இணைந்தனர். இதனை அவர் விரும்பவில்லை. கண்சிவந்தார். அதேபோல் சோவியத் ரஷ்யா மற்றும் கம்யூனிசம் குறித்த ஜவஹர்லால் நேருவின் எழுத்துக்கள் அவருக்குள் எழுச்சியை உருவாக்கியது. அவரது ஆசிரியர் பாலவேஷம் செட்டியார் கம்யூனிசத்தை பெரிதும் புகழ்ந்து பேசுவார். இதனால் நல்லக்கண்ணு பார்வை இந்திய கம்யூனிஸ்ட் பக்கம் போனது.
* முதலில் காங்கிரசில் செயல்பட்ட நல்லக்கண்ணு 15 வயதிலேயே கம்யூனிஸ்ட்டாக மாறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 15 வயதில் இணைந்தார்.
* 25 வயதில் தனது நண்பர்களுடன் இணைந்து நல்லகண்ணு மாநிலம் முழுவதும் விவசாய சங்கங்களை உருவாக்கினார். 1940களில் ஒரு சவாலான காலகட்டமாக இருந்தது. ஒருபுறம், சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தது, மறுபுறம், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நில பிரபுக்களுக்கு எதிராக வர்க்க போராட்டங்களை வழிநடத்த தொடங்கினர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.
தலைமறைவு – சிறை வாழ்க்கை
* 1952 ஆம் ஆண்டில், நெல்லை சதி வழக்கில் ஈடுபட்டதற்காக நல்லகண்ணு ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நல்லகண்ணுவை போலீஸார் கைது செய்தனர். காவலர் ஒருவர் நல்லகண்ணுவின் மீசையை சிகரெட்டால் சுட்டெரித்தார். அதனால்தான் நல்லக்கண்ணு மீசை வைத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
* 1940 முதல் 1950 வரையிலான காலக்கட்டத்தில் போலீசார் அவரை தேடியதால் நல்லக்கண்ணு தலைமறைவு (UNDERGROUND) வாழ்க்கை வாழ்ந்தார். அப்போதும் கூட அவர் விவசாயிகள், ஒடுக்கப்பட்டோருடன் சேர்ந்து தான் இருந்தார்.
* 25 ஆண்டுகள் விவசாய சங்கத் தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றிய நல்லகண்ணு, ஜாதி உள்பட பல்வேறு அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
* 2000ம் ஆண்டில் அவர் நடத்திய போராட்டங்களின் காரணமாகவே தாமிரபரணி போன்ற ஆறுகளில் மணல் அள்ள நீதிமன்றங்கள் தடை விதித்தன. தனது வாழ்நாள் முழுவதும் இலக்கிய படைப்பு மற்றும் படிப்பதில் நாட்டம் கொண்டவர். 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
* 1999 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர், பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார். நேர்மையாக, எளிமையாக, பணிவாக இருப்பதாலேயே தேர்தலில் வெற்றி கிடைத்து விடாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.