07/04/2026
சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட அரிதிலும் அரிதான வழக்கில் கைதான அனைவருக்கும் மிகப்பெரிய தண்டனையான மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் குற்றத்தில் தொடர்புடைய காவலர் முத்துராஜா அவரைப் பற்றி சொல்கிறேன்.
முத்துராஜா வேற யாரும் இல்லை, என்னுடன் டிப்ளோமா படித்த எனது நெருங்கிய நண்பன். நான் கல்லூரி விடுதியில் தங்கி படித்த போது முத்துராஜாவும் எங்களுடன் தான் தங்கி படித்தான். நண்பர்களுக்கு ஒன்று என்றால் உயிரையும் தருவான், எப்போதும் சிரித்த முக அழகன் போல தான் இருப்பான், ரொம்ப சத்தம் போட்டு மற்றவர்களிடம் பேச மாட்டான், கெட்ட வார்த்தை சிறிதும் உபயோகப்படுத்த மாட்டான், வகுப்பில் அதிகம் சேட்டை செய்யமாட்டான், இவனால் யாருக்கும் எந்த வகையிலும் தொல்லை இல்லை, சிறந்த கபடி விளையாட்டு வீரன், இவன் கபடியில் ரெய்டு பாடி வந்தால் எதிரணி வீரர்கள் நிலைகுலையும் அளவிற்கு மிகவும் சாமர்த்தியமாக விளையாடுவான், இப்படி இவனிடம் நாங்கள் அனைவரும் நல்ல குணத்தை மட்டுமே பார்த்தோம்.
ஆனால், அது தான் அவனுக்கு இப்போது வினையாகியுள்ளது. ஆமாம், தனது உற்றவர்கள் என்ன சொன்னாலும் முடியாது என்று சொல்ல மாட்டான். இப்படித்தான் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் அவர்களும் சக SI அதிகாரிகளும் கட்டளையிட்டவுடன் மற்ற காவலர்களுடன் இணைந்து இந்த மகா பாவ செயலை செய்துவிட்டான். அதற்கு தண்டனையாக ஒரு பெரும் அபராத தொகையுடன் மரண தண்டனையும் பெற்றுள்ளான்.
இதில் இருந்து நாம் அறிய வருவது என்னவென்றால், என்னதான் நமது மேலதிகாரிகளுக்கு நாம் விசுவாசமாக இருந்தாலும், அவர்களுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களைப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே பார்ப்பார்கள் அல்லது கடைநிலை ஊழியர்களை மாட்டிவிடப் பார்ப்பார்கள். இனியாவது அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து கடமையாற்றிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இந்த தண்டனை மூலம் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நிச்சயம் வரும்.
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நல்லதொரு தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் நேர்மையைப் பாராட்டுகிறேன்.
-தண்டனை பெற்ற
காவலர் ஒருவரின்,
நண்பர் எழுதிய பதிவு.
நான் என்னச் சொல்றேன்னா;
"காவல் பயிற்சிக் கல்லூரியில்
இருந்தே காட்டுத்தனமாக
நடந்துகொள்ள பயிற்சி அளிக்கும்
ஒரு துறையை சீர் செய்ய எந்த
முயற்சியும் செய்யாமல்,
சிக்கியவனுக்கு மரண தண்டனை சிக்காதவனுக்கு சிங்கார வாழ்க்கை
என்று வழங்குவதில்
ஒரு பயனும் இல்லை."