Health Zone Addalaichenai

Health Zone Addalaichenai Rendering Quality health care to the kids

சிறார்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கல்

இது நமக்குத்தெரியுமா?
22/01/2024

இது நமக்குத்தெரியுமா?

03/12/2023

ஆக… தரம் 8 படிக்கிற புள்ள O/L பாஸாகுதெண்டா… நம்மள இவனுகள் 3 வருசமா சும்மா அலைக்கழிச்சிருக்கானுகள் என்று அர்த்தம். இது விளங்கல்லாட்டி நமக்கு இன்னும் புத்தி புடிபடல்லன்னு அர்த்தம் !

01/10/2023
நீங்களும்  காவியா?Dr PM Arshath Ahamed MBBS MD PAED."ஏன் சார் இப்படி நடக்குது. மொத புள்ளயும் இப்படி தான். இப்ப தான் இந்த...
12/05/2023

நீங்களும் காவியா?
Dr PM Arshath Ahamed MBBS MD PAED.

"ஏன் சார் இப்படி நடக்குது. மொத புள்ளயும் இப்படி தான். இப்ப தான் இந்த புள்ள ஏழு மாசம் இதுவும் அப்படி னா நான் எப்டி சார் தாங்குவன்… கண்ணீர் பெருக்கெடுக்கிறது."

"என்ன டாக்டர் சொல்றீங்க!! மாசா மாசம் என்ட புள்ளக்கி ரத்தம் பாய்ச்சனுமா. என்ட அல்லாஹ் !!! … அப்படியே உறைந்து போய் விடுகிறார்.

"அய்யா இப்ப தான் என்ட புள்ளக்கி ஒரு வயசி. ரத்தம் பாயச்சாமா குளிசை மருந்து ஏதும் தந்து இதை சுகமாக்கினீங்கனா புண்ணியமா போகும்." ஏக்கம் பெருமூச்சுடன் வெளியேறுகிறது.

இவைகள் மாதத்தில் ஒரிரு முறையாவது நான் சந்திக்கின்ற உரையாடல்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த நோயோடு வாழுகின்ற 3500பேர் இப்போது நம் மத்தியில் இருக்கின்றனர். அது போல, இந்த நோயை உண்டாக்க கூடிய மரபணு மாற்றம் கொண்ட நோய்காவிகளாக (cariers) கிட்டத்தட்ட 5 இலட்சம் பேர் நமது நாட்டிலியே அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய, வட மத்திய, வடமேல் மாகாணங்களை சேர்ந்தவர்கள். குருநாகல் புத்தளம் அன்பர்கள் அட்டன்ஸன் ப்ளீஸ்.

(யாதும் ஊரே யாவரும் கேளிர் அப்டின்னு சொல்லிட்டு சிறிலங்காவ மட்டும் சொன்னா நல்லா இருக்காதே) அதனால் இன்னும் கொஞ்சம் விபரமாக பார்ப்போம். உலகில் உயிரோடு பிறக்கின்ற 10,000 குழந்தைகளில்
4.4 குழந்தைகள் இந்த நோயோடு தான் பிறக்கின்றன. உலகில் வாழுகின்ற மக்களில் 5%மான மக்கள் இந்த நோயை உண்டுபண்ணும் மரபணு மாற்றங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

சரி இவ்வளவு சொல்றீங்க... அது என்ன நோய் என்று இன்னும் சொல்லவில்லையே .? ☺️

கொஞ்சம் பொறுமை. வரும்.

அது தான் தலசீமீயா நோய்( Thalassemia).
இது குறித்து எனக்கு கொஞ்சம் தெரியும் டாக்டர்! என்பவர்கள் எப்டி தெரியும்? யாராவது நோயாளிகளான உறவினர்கள் நண்பர்களின் ஊடாகவா? என்பதை கீழே கொமண்டிலே தெரிவிக்கலாம். நோயாளியின் பெயர் விபரங்கள் தேவை இல்லை.

நமது உடலிலுள்ள குருதியில் சிவப்பணுக்கள்-RBC, வெள்ளையணுக்கள்-WBC, குருதிச் சிறுதட்டுக்கள்- PLATELETs என்ற மூன்று வகை கலங்கள் காணப்படுகின்றன. இதில் நிறமுள்ள பதார்த்தமாக இந்த RBC இருப்பதாலே நமது குருதி இரத்தச் சிவப்பு நிறமாக தெரிகிறது.ஓ ஐ ஸி !!!. (இல்லையென்றால் பச்சை, நீலம், மஞ்சளாக இருந்திருக்குமோ தெரியாது அவர்கள் ஆதரிக்கும் கட்சியை பொறுத்து.) நிற்க.
சரி, விஷயத்துக்கு வருவோம்.

தலசீமீயா என்பது இரத்த சிவப்பணுக்களோடு ( Not RCB ,RBC) சம்பந்தமான ஒரு பரம்பரை நோய். இது இரத்தச் சிவப்பணுக்கள் தொடர்ந்து, உரிய காலத்திற்கு முன் அழிவடைவதால் வரும் ஒரு நோயாகும்.

இந்நோயில் பல படி நிலைகள் உள்ளன.
அதில் மிக ஆபத்தானது, உயிர் வாழ தொடர்ந்து நோயாளிக்கு இரத்தம் செலுத்த வேண்டிய நிலைமை; இது பெரும் தலசீமியா (thalassemia major) எனப்படும்.

அறிகுறிகள் அற்ற, சிறு தலசீமியாவும் (thalassemia minor), இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைமாறும் இடைத்தலசீமியாவும் (thalassemia intermedia) உள்ளன. இவைகள் ஆபத்து குறைவானவை.

எந்தவகை தலசீமியாவாக இருந்தாலும், அவை எல்லாமே மரபு வழிப்பட்ட இரத்தக் கோளாறுகள் மூலமே உருவாகின்றன. அதாவது, பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கடத்தப்படுகின்றன. பெரும் தலசீமியாவைக் குழந்தைகளூக்கு கடத்த வேண்டுமானால் பெற்றோர் இருவருமே குறைபாடுள்ள மரபணுவை கொண்டிருக்க வேண்டும் (autosomal recessive inheritance).

இக் குறைபாடுடைய மரபணுவின் தோற்றம் மத்திய தரைக்கடல் பகுதி என்று வரலாற்று அடிப்படையில் நம்பப் படுகிறது. எனவேதான் தலசீமியா என்று பெயர் பெற்றது. சிங்களத்தில் கபுடா என்றால் காகம் என்பது போல, கிரேக்க மொழியில் தலஸ் என்றால் கடல். இருந்தாலும் கடலே இல்லாத குருநாகலையில் இந்த வகை நோயாளிகள் அதிகம் காணப்படுவது போல, இலங்கை உட்பட பல ஆசிய, மத்திய கிழக்கு, ஐரோப்பிய , ஆபிரிக்க நாடுகளிலும் இந்த நோய் பரவி காணப்படுகிறது. அப்டியே பின்னோக்கி சென்றால், இவர்கள் எல்லோரும் மத்திய தரைக்கடலோடு ஏதோ ஒரு வகையில் பரம்பரை தொடர்புடையவர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, தலசீமியா என்றால் என்ன என்று இன்னமும் விளக்கமாக சொல்லவில்லையே?

தலசீமியா என்பது ஒரு வகை இரத்தச் சோகை. அதாவது ஒருவருக்கு RBCல் உள்ள இரத்தப்புரதம் (ஹீமோகுளோபின் Hb)தேவையான அளவைவிடக் குறைவாக இருத்தல். இதற்குக் காரணம் ஏற்கனவே சொன்னது போல சிவப்பணுக்கள் விரைவாக சிதைந்து போவது. இந் நிகழ்வு சிவப்பணு சிதைதல் (hemolysis) எனப்படுகிறது.

பெரும் தலசீமியா ( major) கொண்டவர்களுக்குக் இந்த சிதைதல் உக்கிரமாக இருக்கும். அதனால் கடுமையான இரத்தச்சோகை இருக்கும். இதை நிவர்த்தி செய்ய தொடர்ந்து இரத்தம் செலுத்தவேண்டி வரும்.( ஓ இது தானா மேட்டர்!!.)

ஏன் தலசீமீயாவில் RBCஅழிவடைய வேண்டும்? என்ன காரணம்?

இத் தொடர் அழிவுக்குக் காரணம் சிவப்பணுவின் (RBC) நிலைப்பாற்றலை தடுக்கும் ஒரு மரபுக் கோளாறாகும். இம் மரபுக் கோளாறு மரபணுக்கள் மூலமாக பெற்றோரிடம் இருந்து குழந்தைக்குக் கடத்தப்படும். பெற்றோர்களில் ஒருவரிடம் இருந்து குறைபாடுடைய இரத்தப் புரத மரபணுவையும், மற்றவரிடம் இருந்து இயல்பான மரபணுவையும் பெற்றுக் கொள்ளும் ஒருவர் பொதுவாக நோய்கடத்துபவர்-காவி (carrier)என்று அழைக்கப்படுகிறார். நோய் கடத்துபவருக்கு மிதமான இரத்த சோகையைத் தவிர வேறு எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. அவருக்கு இரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவை வருவதில்லை. ஆனாலும் அவர் குறைபாடுள்ள மரபணுவைக் கொண்டு செல்கிறார். காவிக்கொண்டிருக்கிறார்.
இதனாலே இவர் காவி என்று அழைக்கப்படுகிறார்.

HbA என்று அழைக்கப்படும் இயல்பான இரத்தப்புரதம் Haemoglobin நான்கு புரதச் சங்கிலியைக்(globin) கொண்டுள்ளது; இரண்டு ஆல்பா புரதங்களும், இரண்டு பீட்டா புரதங்களும். இவ்விருவகை புரதச் சங்கிலிகளில் உள்ள மரபுக் குறைபாட்டின் அடிப்படையில் இரண்டு பெரும் தலசீமியாக்களான ஆல்பாவும், பீட்டாவும் பெயரிடப்படுகின்றன. இது ஆண்களையும், பெண்களையும் சம அளவில் பாதிக்கும் நோயாகும்.

போதுமான பீட்டா குளோபின் புரதச் சங்கிலியை உருவாக்க இரண்டு மரபணுக்கள் (பெற்றோர் ஒவ்வொருவரிடமும் இருந்து ஒவ்வொன்று) தேவைப்படுகின்றன. ஒன்றிலோ அல்லது இரண்டு மரபணுக்களிலுமோ மாற்றம் ஏற்பட்டால் பீட்டா தலசீமியா உண்டாகிறது. மாற்றம் நிகழ்ந்த மரபணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பீட்டா தலசீமியாவின் கடுமை அமைகிறது. இரண்டு மரபணுக்களுமே பாதிக்கப்பட்டால் பெரும் தலசீமியாவும் கடுமையான இரத்தச்சோகையும் ஏற்படுகின்றன. ஒன்று பாதிக்கப்பட்டால் தலசீமியா மைனர்- காவி நிலை உருவாகிறது.

அது போல, ஆல்பா குளோபின் சங்கிலியை இரண்டு மரபணுக்கள் உருவாக்குகின்றன. நான்கு மரபணுக்களில் இரண்டு பாதிக்கப்படும்போது ஆல்பா தலசீமியாவின் நோய்கூறு தோன்றுகிறது. மூன்று பாதிக்கப்பட்ட மரபணுக்களைக் கொண்ட நோயாளிக்கு இரத்தப்புரதநோய்-எச் HbH ஏற்படுகிறது. அரிதாக ஹைடிராப்ஸ் ஃபெட்டாலிஸ் Hydrop fetalis என்ற கடுமையான நிலை ஏற்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் பிறப்பதற்கு முன்னோ சற்று பின்னோ இறந்து விடுவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் பிழைப்பது மிக அரிதாகும். அதனால் தான் ஆல்ஃபா தலசீமியா அரிதாக காணப்படுகிறது.

தலசீமியா மைனர் என்றால் என்ன?

இது நோயைக்காவியாக இருக்கும் ஒரு நிலை (carrier state). தலசீமியா நோய்க்குறிகள் அற்ற சிறுதலசீமியா Thalassemia minor என்று இது அழைக்கப்படுகிறது. இத்தகைய நோயாளிகளுக்கு ஒரு சில பிரச்சினைகளே இருக்கும். இவர்கள் இயல்பாக வாழ்க்கை நடத்துவர். பெரும்பாலனவர்கள் இப்படி ஒரு நோய் தமக்கு இருப்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டிருப்பர்.

மேலும், இடைத்தலசீமியா-Thalassemia intermedia நோயாளிகள், பெரும், அல்லது சிறு தலசீமியா நோயாளிகளைப் போன்றோ அல்லது அதற்கு இடைப்பட்ட ஒரு தொங்கு நிலையிலோ இருப்பார்கள். பொதுவாக பெரும் தலசீமியா நோயாளிகளைப் போன்று இவர்களுக்கு இரத்தச் சோகை கடுமையாக இருக்காது. இருப்பினும் பலருக்கு சில வேளைகளில் இரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் அளவுக்கு இரத்தச் சோகை ஏற்படும். இவர்களுக்கு உடலில் இரும்புச்சத்து-serum ferritin அதிகமாகக் கூடிய அபாயம் இருப்பதால் மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்படும்.

பெரும் தலசீமியா- Thalassemia major நோயாளிகளின் நிலை என்ன?

பெரும் தலசீமியா நோயாளிகளுக்கு இரத்தச்சோகையின் அறிகுறிகள் ஒரு வயது வருவதற்கு முன்பே தென்படத் தொடங்கும். இரத்தப்புரதம்- Hb மிகவும் குறைவதால் இவர்களுக்கு அதிகமான பிரச்சினைகள் உண்டாகும். (இரத்தச் சோகையின் அறிகுறிகளில் அடங்குவன: களைப்பு, சோர்வு, நிறம் வெளிருதல், மூச்சுத்திணறல். மூச்சுவிடுதலில் சிரமமும், கூடுதலான இதயத் துடிப்பு. இந்நிலை கடுமையானால் மாரடைப்பும் ஏற்படலாம். இதற்குக் காரணம் இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவதே.) கோளாறின் கடுமையையும், இரத்தப்புரதத்தின் அளவையும் பொறுத்து அறிகுறிகளின் தீவிரமும் அமையும்.

பலவீனமான உருக்குலைந்த எலும்புகள், மண்ணீரலிலும் கல்லீரலிலும் வீக்கம், குறைவானன உடல் வளர்ச்சி, காலந்தாழ்ந்து பருவமடைதல் போன்றனவும் பிற்காலத்தில் ஏற்படும். தொடர்ந்து இரத்தம் பாய்ச்சுவதால்; இரும்புச்சத்து மிகையாவதால் அதன் பக்க விளைவுகளும் இவர்களில் ஏற்படும்.

ஓ அப்டியா ! எப்படி தலசீமியாவை கண்டறிவது?

தலசீமியாவைக் கண்டறிய சிறப்பு இரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும். சாதாரணமாக செய்யப்படும் இரத்தப் பரிசோதனைகளில் FBCயில் இரத்தச்சோகையின் அளவு Hb level, சிவப்பணு குறியீடுகள் MCV, RDW போன்றவற்றை வைத்து ஓரளவு ஊகிக்கலாம். மேலும், Blood picture போன்ற பரிசோதனைகள் மூலமும் தலசீமியா இருக்கிறதா இல்லையா என்பதை ஓரளவு உறுதிப்படுத்தலாம்.

தலசீமியாவை உறுதிப்படுத்தும் சிறப்பு இரத்தப் பரிசோதனைகள் இரத்தத்தில் இருக்கும் அசாதாரணமான இரத்தப்புரத சங்கிலிகளைக் கண்டறிகின்றன. பீட்டா தலசீமியாவுக்கும் வேறு சில இரத்தப்புரத மரபுக் கோளாறுகளுக்கும் பொதுவாக HPLC எனப்படும் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தையின் வயது ஓராண்டுக்கும் குறைவு என்றால் ஒரு வயது முடிந்த பின் மீண்டும் இச் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். நோயாளிக்கு இரத்த மாற்றம் செய்யப் பட்டிருந்தால் இச் சோதனைகளினால் பயனில்லை. எனவே இரத்தம் பாய்ச்சுவதற்கு முதல் இந்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெற்றோர்களின் இரத்தப் பரிசோதனை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே குழந்தைக்கு தலசீமியா இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு மருத்துவரால் அறிந்து கொள்ள முடியும். எனவே இரத்த மாற்றத்திற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனைகளே மிகவும் நம்பத்தகுந்தது. அதுபோல, பெற்றோர் இருவரும் நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.😞

ஓகே, தலசீமியாவுக்கு என்ன மருத்துவம்?

கோளாறின் வகையையும், கடுமையையும் பொறுத்தே தலசீமியாவுக்கு மருத்துவம் செய்யப்டுகிறது. தலசீமியா நோய்குறி இல்லாத தலசீமியா காவிகளுக்கு மருத்துவம் தேவை இல்லை. ஆனால் அவர்கள் இன்னொரு தலசீமியா நோய்க்குறி இல்லாத காவிகளை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பெரும் தலசீமியா கொண்ட குழந்தை பிறப்பதற்கான அபாயம் இருப்பதை அவர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும். ஆகவே காதல் திருமணமோ , பேச்சுத் திருமணமோ எதுவானாலும் இருவரும் தலசீமியா காவிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். யாராவது ஒருவர் காவியாக இருப்பதில் பிரச்சினை இல்லை.

பெரும் தலசீமியா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவத்தில் இரத்தப்புரதத்தை 10-12 g/dlல் வைத்திருக்க சிவப்பணுக்கள் செறிந்த இரத்த மாற்றத்தைத் தொடர்ந்து Blood transfusion செய்வது அவசியம். நோயின் கடுமை, மண்ணீரலின் அளவு, உடலேற்புத்தன்மை போன்ற பிற பல காரணிகளைப் பொறுத்தே இரத்த மாற்றத்தின் கால இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் இரத்தம் பாய்ச்ச வேண்டும். உலகம் முழுவதும் உதிரக் கொடையாளர்கள் தானம் செய்யும் இரத்தத்தின் ஒரு பெரும் பகுதி தலசீமியா நோயாளிகளை உயிர் வாழ வைக்கவே உபயோகப்படுத்தப்படுகிறது என்பது மேலதிக கொசுறுத் தகவல். குருதிக் கொடையாளர்களுக்கு 💐.

அது போல, நோயாளியின் இரும்புச்சத்தின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். இரும்பின் அளவு கூடினால் இரும்பு நீக்கும் மருத்துகள் தொடங்கப்பட வேண்டும். ஏனெனில், அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நச்சாகும். இது ஈரல், கல்லீரலையும் இதயத்தையும் சிதைத்து, நாளமில்லா சுரப்பிகளுக்குப் Endocrine பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வளர்ச்சி குன்றும்; பருவமடைதல் தாமதப்படுத்தும், நீரிழிவு போன்ற கோளாறுகள் உண்டாகும். இதனால் அதிக இரும்புச்சத்தை குறைப்பதற்கான சிகிச்சையும் மிகவும் முக்கியமானது.

இரத்த மாற்றம் இல்லாமல் வேறு சிகிச்சைகள் உண்டா?

Bone Marrow Transplant (BMT) or Haematopoietic Stem Cell Transplant(HSCT) எலும்பு மச்சை அல்லது புற இரத்த மூல உயிரணு மாற்றமே அறியப்பட்ட ஒரே குணப்படுத்தும் மருத்துவமாகும். இம்முறையில் குறைபாடுள்ள இரத்த உற்பத்தி உயிரணுக்களை மாற்றி, அதற்குப் பதிலாக இன்னொருவரிடம் இருந்து ஆரோக்கியமான இரத்த உற்பத்தி உயிரணுக்கள் வைக்கப்படுகின்றன. இன்னொருவர் என்பவர் பொதுவாக HLA பொருத்தமுடைய (மாற்றத்திற்குத் தகுந்த மரபுப் பொருத்தம்) உடைய, 'குறைபாடுடைய மரபணுக்கள் அற்ற' சகோதரராக அல்லது சகோதரியாக இருக்கலாம். உறவுமுறை அற்ற HLA பொருத்தம் கொண்ட BMT (எலும்பு மச்சை மாற்றம்) செய்யலாம். ஆனாலும், HLA பொருத்தம் கொண்ட உடன்பிறப்புகளிடம் இருந்து BMT மாற்றம் செய்வதே சிறப்பானது.

எலும்பு மச்சை மாற்றம் செய்து கொண்ட நோயாளிகளுக்கு அதற்கு பின், மேலும் இரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. அவர்கள் இனி சாதாரண மனிதர்கள் போல உயிர் வாழலாம். குழந்தைப் பருவத்தில் உடலில் இரும்பு சத்து அதிகரிப்பதற்கு முன்/ Iron overload ஆவதற்கு முதல் இந்த சிகிச்சையை- BMT செய்வதே சிறந்தது.

இந்த நோய் வராமல் எப்படி காப்பது? மரபுவழி ஆலோசனை என்ன?

இது மிகப் பெறுமதியான கேள்வி. வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.
உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ தலசீமியா இருந்தால் திருமணம் செய்வதற்கு முதல், குடும்பத்தைப் பற்றி திட்டமிடுவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரோடு ஆலோசிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக தலசீமியா காவியாக இருப்பவர்கள் இன்னும் ஒரு தலசீமியா காவியை கரம் பற்றாமல் இருப்பது சாலச்சிறந்தது.

குடும்பத்தில் அல்லது உறவினர்கள் மத்தியில் தலசீமியா நோய் இல்லாத ஏனையவர்கள் திருமணம் செய்வதற்கு முதல், பொண்- மாப்பிள்ளை பார்கின்ற போதே கூடவே ஒரு FBC பார்த்துக் கொள்வது நல்லது.

ஆகவே இது குறித்து தெளிவு பெறுவது அவசியம். உங்கள் பக்கத்தில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் நீங்களாகவே சென்று தலசீமியா குறித்த ஆரம்ப பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம். இது ஒன்றே தலசீமியா அற்ற குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கான சிறந்த தெரிவு.

PM. Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்.

பிற் குறிப்பு- தலசீமியாவை குணப்படுத்தும் இயற்கை வைத்தியம், சித்தர் பாடல்கள் ஏதும் இருந்தால் கமன்டிலே அறியத் தரவும். அடியேன் நன்றிக் கடன் உள்ளவனாக இருப்பேன்

01/03/2023

குழந்தைகளை கொல்லும் வயிற்றுப் போக்கு.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED PGPN ENS

Key facts.நம்மட நாட்டு ட்ரான்ஸ்லேசன் படி "திறப்பு உண்மைகள்" 🙂🙂

*ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு வயிற்றுப்போக்கு நோய் இரண்டாவது முக்கிய காரணமாகும்.

*வயிற்றுப்போக்கு தடுக்கக்கூடியதும் மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியதுமான ஒரு நோய்.

*இப்போதும், ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுப்போக்கினால் ஐந்து வயதுக்குட்பட்ட 525,000 குழந்தைகள் இறக்கின்றனர்.

*பாதுகாப்பான குடிநீர் மற்றும் போதுமான மலசலகூட வசதிகள் (Sanitation) மற்றும் துப்புரவு பழக்க வழக்கங்கள் (Hygiene) மூலம் வயிற்றுப்போக்கு கணிசமாக தடுக்கப்படலாம்.

*உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பருவ வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் கிட்டத்தட்ட 1.7 பில்லியன்கள்.

*ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வயிற்றுப்போக்கும் முக்கிய காரணமாகும்.

அதெல்லாம் சரி, விஷயத்துக்கு வாங்க

வயிற்றோட்டம் diarrhoea எனும் சொல் , பண்டைய கிரேக்க சொல்லான διά-ρροια from (διά) dia "through" and (ρροια) rheo "flow". என்பதில் இருந்து பிற்நதிருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கர்கள், எல்லாம் வெளியே போனபின் எதற்கு அந்த O என்று அதையும் எடுத்துவிட்டு' diarrhea என்று எழுதி வருகிறார்கள்.

வயிற்றோட்டம் மனித வரலாற்றில் பல்வேறு சம்பவங்களை நிகழ்த்தி இருக்கிறது. அரசுகளை கவிழ்த்திருக்கிறது. யுத்தங்களை இடைநடுவில் முடித்து வைத்திருக்கிறது. சில வேளைகளில், முடிக்குரிய இளரவரசர்களையும் மாற்றி அமைத்திருக்கிறது. (அரசுகளை கவிழ்த்த வயிற்றுப் போக்கு!! சாம்ராஜ்யங்களை சரித்த வயிற்றோட்டம் என்ற தலைப்பில் யூடியுபர்கள் வீடியோ செய்யலாம். அவ்வளவு கென்டன்ட் இருக்கிறது.)

அறிவியல் வளர்ச்சிக்கு முன்னைய காலங்களில் பிறந்த குழந்தைகளில் மூன்றில் ஒன்று, 5வயதை அடைவதற்கு முன்னரே இந்த கொடிய வயிற்றோட்டத்தினால் இறந்து போயிருக்கிறது. வயிற்றோட்டம் வந்தால், கடைசியாக ஒரு தடவை கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என்று சொல்வதை தவிர வேறெந்த மருந்தும் அப்போது இல்லை. பாரம்பரிய வைத்தியம், இயற்கை வைத்தியம் எல்லாமே அப்போது இந்த சாவுகளை கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது என்பதை முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பவர்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

அறிவியல் வளர்ச்சி, சுத்தமான குடிநீர் நீர், வியாபித்த மலசல கூடங்களின் பாவனை, உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு(Food Safety), வக்சீன்களின் நோய்த் தடுப்பு போன்றன வயிற்றோட்ட நோய்களை பெருமளவு குறைத்திருக்கின்றன. இதனால் டயறியா, தற்போது பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறி இருக்கிறது.

(அதெல்லாம் செரி,
வயிற்றோட்டம் என்றால் என்ன? அத சொல்லுங்க மொதல்ல… )

ஒரு நாளைக்கு மூன்று தடவைகளுக்கு மேல், தண்ணீர் போலவோ அல்லது இளக்கமாகவோ மலம் வெளியேறுதல் வயிற்றோட்டம் என்று அழைக்கப்படும். இது வைரஸ், பக்றீரியா, பங்கஸ், அல்லது ஒட்டுண்ணிக் கிருமிகள் (பரசைட்), போன்ற நோய்க் கிருமிகள் உணவுக் கால்வாயில் தொற்றுவதால் ஏற்படும். எனினும் இந்த டெபினிஷன் பாலூட்டும் சிறிய கைக் குழந்தைகளுக்கு பொருந்தாது. அவர்கள் ஒரு நாளைக்கு சில வேளைகளில் பத்து தடவைக்கு மேல் மலம் கழிப்பார்கள். அது அவர்களின் வயதிற்கு நோர்மலானது. சாதாரணமானது.

பெரும்பாலும், வைரஸ் தொற்றுக்களே குழந்தைகளில் அதிகளவான வயிற்றோட்டம் ஏற்பட காரணமாக அமைகின்றது. இந்த தொற்றுக்கள் சாதாரணமாக சுகமாகிவிடும். நீர் இழப்பை சரி செய்தாலே போதுமானது. இருந்தாலும் Rota Virus தொற்றுக்கள் கொஞ்சம் வீரியமானவை‌
குழந்தைகளில் அதிக நீரழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சில வேளைகளில் மரணத்தை கூட சம்பவிக்க வைக்கும் அளவுக்கு பாரதூரமானதும் கூட. இந்த ரோட்டா வைரஸ் தொற்றை தடுக்கும் வக்சீன்கள் எல்லா இடங்களிலும் தற்போது பரவலாக பாவனையில் உண்டு.

இது போல, மாசடைந்த உணவுகள், சுத்தமற்ற குடிநீர் மூலம், பக்றீரியா மற்றும் ஒட்டுண்ணிக் கிருமிகளின் தொற்றுக்கள் பெரும்பாலும் ஏற்படுகிறது. வயிற்றோட்டத்திற்கு மேலதிகமாக மலத்துடன் சளி, இரத்தம் வெளியேறுதல், வயிற்றுளைவு- நோவு Dysentry போன்றன இதன் பிரதான
அறிகுறிகளாகும். இது வைரஸ் தொற்றுக்கள் போல் அல்லாது கொஞ்சம் பாதிப்பானது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

இந்த வகை Dysentery அறிகுறிகளாக அடிக்கடி வயிற்று வலியுடன், சளி கலந்து +/- இரத்தம் போகும். Escherichia coli (E. coli), Salmonella, Shigella போன்ற கிருமிகளால் இவ்வாறான தொற்றுக்கள் ஏற்படும். இந்த தொற்றுக்கள் feco - oral route (மலசலகூட கழிவுகள் குடி நீரில் கலப்பதால், உணவுப் பொருட்களை கையாளும் போது கைகள் மூலமாகவும் ) கடத்தப்படும். எனவே உரிய பாதுகாப்பு முறைமைகள் மூலம், சுகாதார பழக்கவழக்கங்கள் மூலம், இவ்வாறான தொற்றுக்களை தடுக்கலாம். இதில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது.

தண்ணீரை கொதித்து ஆற வைத்தால் , பில்டர் பண்ணி குடித்தால் அதில் உள்ள உயிர் போய்விடும், செத்த தண்ணீரை தான் குடிக்க வேண்டி வரும், ஆகவே மண்பானையில் ஊற்றி வைத்த தண்ணீரை, வெண்கல கோப்பையில் ஊற்றிக் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும். உயிர் உள்ள தண்ணீர் கிடைக்கும் என்ற ஹீலர் ஜீவன்களின் பிரச்சாரத்தை நம்பிய பலர் கடைசியில் சல்மனல்லா இன்ஃபெக்ஷன் வந்து ஐசியு வில் இருந்த கதைகள் உண்டு. கவனம் மக்காள்.

சமறி என்னவென்றால், பெரும்பாலும் வைரஸ் தொற்றுக்கள் காரணமாக ஏற்படும் வயிற்றோட்டம் சிகிச்சையின்றியே குணமாகக் கூடியது. சிறுவர்களில் பொதுவாக 2-4 நாட்களுக்குள் தானாகவே குணமாகிவிடும். சிறு குழந்தைகளில் சற்று அதிகமாக 5-7 நாட்கள் வரை எடுக்கலாம். கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் டிசன்றி வகை தொற்றுக்கள் கொஞ்சம் தீவிரமானவை. உரிய சிகிச்சையை உடனடியாக வேண்டி நிற்பவை. என்ன தான் இருந்தாலும், எந்த வகை வயிற்றோட்டமாக இருந்தாலும், உடலிலிருந்து நீரிழப்பு நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இது தான் அடிப்படை.

வயிற்றோட்டம் ஏற்பட்டவர்களுக்கு முடியுமான அளவு, அதிக நீராகாரங்களை அருந்தக் கொடுக்க வேண்டும். செவ்விள/ இளநீர், அரிசி/சோற்றுக் கஞ்சி, ஜீவனி (ORS - Oral Rehydration Solution) போன்றன இதற்கு மிகவும் பொருத்தமானவை. இவை தவிர, அதிக செறிவும், அடர்த்தியும் உள்ள குளுக்கோஸ் மற்றும் பழச்சாறுகள், அதிலும் குறிப்பாக போத்தலில் அடைக்கப்பட்ட பானங்கள், கொடுப்பது வயிற்றோட்டத்தை தீவிரப்படுத்தும். ஆகையால் இவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

வயிற்றோட்டம் ஏற்பட்டவர்களுக்கு, அவர்களாக விரும்பி உண்டால், வழமை போல உணவுகளை உண்ண கொடுக்கலாம். ஆனாலும் அதற்கு மேலதிகமாக அதிக நீராகாரங்களை கொடுப்பது அவசியம் என்பதை மறக்க வேண்டாம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, இப்போது ஜீவனி போன்ற ORS (Oral Rehydration Solutions) பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இதற்கு பதிலாக கொஞ்சமாக உப்பும், சிறிதளவு சீனியும் சேர்த்த இளநீர் , சோற்றுக் கஞ்சி போன்றவற்றை பயன்படுத்த முடியும். (வீட்டிலே ஜீவனி செய்வது எப்படி என்று வீடியோ ஒன்று போட்டால் நிறைய லைக் எடுக்கலாம்.)

கொலாரா, சல்மனெல்லா போன்றவைகள் ஒரு காலத்தில் பெரும் சம்பவங்களை நிகழ்த்திய ஜாம்பவான்கள். ஊரே நடுங்கும் அளவுக்கு கடுமையான பீதியைக் கிளப்பிய சண்டியர்கள். இப்போது மருத்துவ வளர்ச்சி, அன்டிபயாட்டிக் பாவனை மூலம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இருந்தாலும், தற்போதைய தேவையற்ற , அதீத ஆன்டிபயாட்டிக் பாவனை காரணமாக (Antibiotic Resistance மூலம் மீண்டும் இவர்கள் சண்டித்தனம் காட்ட ஆரம்பித்துள்ளனர். வீரியம் பெற தொடங்கி உள்ளனர் என்பதையும் நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். எனவே சாதாரணமாக சுகமடையும் வைரஸ் தாக்க வயிற்றோட்ஙகளுக்கு இந்த வகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பது தேவையில்லாத ஆணி‌. தவிர்க்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட எல்லோரும் இயுக்குவல் குற்றவாளிகளே. அவர்கள் வைத்தியராக இருந்தாலும் சரியே.

மேற்குறிப்பிட்ட இரண்டு வகையான Acute வயிற்றோட்டங்கள் தவிர்ந்த, பல்வேறு நெடுநாள் வயிற்றோட்டங்களும் Chronic Diarrhoea உள்ளன. இவைகள், பெரும்பாலும் வேறு வகை நோய்களின், பகுதியான அறிகுறிகளாக வெளிப்படும். இவை பெரும்பாலும் நீண்ட நாட்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும்.

உதாரணமாக "எரிச்சலடையும் குடல்" ( என்னைய்யா இது எரிச்சலடையும் மனம் கேள்விப்பட்டிருக்கோம் புதுஷா குடல் வேற இருக்கா??) Irritable Bowel Syndrome(IBS), Crohn’s Disease (CD), Ulcerative Colitis(UC), Lactose/Galactose/Fructose Intolerance (Food Intolerance) போன்ற பல நோய்கள் உள்ளன. இந்த வகை Glucose - Galactose Malabsorption காரணமாக மூன்று வேளையும் மாட்டிறைச்சி மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் பாடசாலை மாணவி ஒருவரை நான் LRH ல் இருந்த போது கண்டிருக்கிறேன். இவர் பற்றி ஆவணப்படம் மீடியாக்களிலும் ஒளிபரப்பானதாக ஞாபகம். அவர் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. கொஞ்சம் கண்களை மூடி, ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் இறைச்சி மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்றால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்த கஷ்டம் புரியும்.

இவற்றைத் தவிர நீரிழிவு, உணவுக் கால்வாய் புற்றுநோய்கள், போன்றவையும் நீண்ட நாள் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தலாம். எனவே ஒரு வாரத்திற்கு மேலாக வயிற்றோட்டம் இருந்தால் கட்டாயம் விடய ஞானம் உள்ள வைத்தியரை ( நோட் த பாயிண்ட் யுவர் ஆனர்) அவசரமாக, அவசியம் சந்தித்து உரிய சிகிச்சைகளை பெற்று கொள்ள வேண்டியதும், இது எதனால் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டியதும் கட்டாயம். ஏனெனில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாமதித்தால் சிகிச்சை பலனின்றி போக கூடும்.

உணவு ஒவ்வாமைகளாலும் Food Allergy, அதிலும் குறிப்பாக Cow's Milk protein Allergy காரணமாகனவும் பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு. இதற்கு தீர்வு, அவ்வாறான ஒவ்வாத உணவுகளை முற்றாக தவிர்ப்பது மாத்திரமே.

இதுபோல, சில வகை மருந்துகளும் வயிற்றோட்டத்தை ஏற்படுத்துலாம். அன்டிபயோடிக் மருந்துகள், வலிநிவாரணிகள், வயிற்று எரிவிற்கு உபயோகிக்கும் மக்னீசியம் கலந்த மருந்துகள், புற்றுநோய்கான மருந்துகள், போன்ற பல மருந்துகள் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும். அது குறித்தும் கவனம் அவசியம்.

இது போல, இத்தகைய தீவிர நோய்களால் மட்டுமின்றி, சாதரணமாக ஏற்படும் பதகளிப்பு, மனப் பதற்றம் Anxiety, Stress போன்ற காரணங்களாலும் பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு. காலையில் வேலைக்கு அல்லது பாடசாலைக்கு புறப்படத் தயாராகும்போது , எக்ஸாம்களுக்கு போகும் போது அடிக்கடி டொயிலட் செல்பவர்களும், சாப்பிட்ட பின்னர் டாய்லட்டுக்கு ஓட்டுபவர்களும் இதில் அடங்குவர். இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. நாளைடைவில் சரியாக விடும். டாய்லட்டை அந்த நேரம் மூடி வைத்தால் இது தானே சரியாகிவிடும். இது போல சிறுவர்களில்
Toddler Diarrhoea எனும் ஒரு வகை வயிற்றோட்டம் உண்டு . அதுவும் நாளடைவில் தானாகவே சரியாகிடும். அச்சப்பட வேண்டியதில்லை.

நவீன பெற்றோர்களை ஆட்டுவிக்கும் ஆட்டிசம்.Dr PM Arshath Ahamed  MBBS MD PAED குழந்தை நல மருத்துவர்."சார் புள்ளைக்கி ரெண்டு...
25/02/2023

நவீன பெற்றோர்களை ஆட்டுவிக்கும் ஆட்டிசம்.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED குழந்தை நல மருத்துவர்.

"சார் புள்ளைக்கி ரெண்டு வயாசுகுது இன்னும் பேசுறான்ல".

"இவன் சரியான கரைச்சல். ஒரு இடத்தில இருக்க மாட்டான்".

" நேர்சரி டீச்சர் சொல்றா இவள் படிக்கமாட்டாளாம். அறவே கவனம் இல்லையாம்.

இப்படி பல்வேறு பிரச்சினைகளுடன் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருகிறார்கள்.‌ சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இன்னும் சிலர் இன்டர்நெட்டில் தேடிக் களைத்து ஆட்டிசம் என்ற சொல்லை கண்டவுடன் பரிதவித்து போகிறார்கள். பலருக்கு இந்தச் சொல் பழக்கமாக இருந்தாலும் இன்னமும் பயம் குறைந்தபாடில்லை.

👉ஓகே. Autism(ஆட்டிசம்)என்றால் என்ன? நீங்களே சொல்லுங்களேன்.

🙂அது ஒன்றும் இல்லை. இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. சிலவேளை, ஒரு சில இலகுவான பிரச்சினைகளும், சில வேளைகளில் மிகச் சிக்கலான பிரச்சினைகளும் இருப்பதால் இதை "Autism Spectrum Disorders (ASD)" என்று அழைக்கிறோம். அது போல இருதயத்தில் மேல் அறையில் ஏற்படும் துளையையும் ASD(Atrial Septal Defect-'ஹோல் இன் த ஹாட்') என்றே அழைக்கிறோம். ASD என்பதை டயக்னோஸிஸ் காட்டில் பார்த்து விட்டு 'ஹோல் இன் த ஹாட்' உள்ளவர்கள் நரம்பியல் நிபுணரையும், ஆட்டிசம் உள்ளவர்கள் கார்டியொலிஜிஸடயும் வந்தடைந்த கதைகள் நிறைய உண்டு. (Dr Aakiff , Dr Haartheek அப்படித்தானே)

ஆட்டிசம் குழந்தைகளின் தொடர்பாற்றல், கருத்துப்பரிமாற்றம் ஆகியவற்றை வெகுவாக பாதிக்கிறது. பேச்சாற்றலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவதில், தன் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதில் இயலாமையை உண்டாக்குகிறது. இது தான் பிரச்சினை.

இருந்தாலும், இது ஒரு நோய் கிடையாது. ஒரு குறைபாடு மாத்திரமே. நோய் என்றால் சுகப்படுத்தலாம். குறைபாடு என்றால் நிவர்த்திக்கலாம். ஆகவே அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

👉ஓகே. அப்படியானால்
ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்னென்ன? அதை எப்படி அடையாளம் காண்பது?

🙂இதை குழந்தையின் வளர்ச்சி செயல்பாடுகளை கவனமாக உற்று நோக்குவதன் மூலமே அறிந்து கொள்ள முடியும். இதற்கான விஷேட பரிசோதனைகள் எதுவும் இல்லை.

குழந்தைகள், பொதுவாக, ஏனைய மனிதர்களைப் போலவே ஒரு சமூக விலங்கு. முக பாவனைகளுக்கு ஏற்றாற் போல் தானும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் அவர்களுக்கும் உண்டு. புன்னகைத்தால் புன்னகைப்பார்கள். முறைத்தால் அழுவார்கள். கையை விரித்து நீட்டி கிட்டப்போனால் ஓடி வருவார்கள். இது தான் அவர்கள் இயல்பு.

ஆனால், ஆட்டிசம் உள்ள குழந்தைகள் இது போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் அவர்களுடைய தனி உலகில் இருப்பார்கள். நமது அரசியல்வாதிகளை போல, யாரையும் பற்றி கவலைப்பட மாட்டார்கள். உணர்வுகளை பிரதிபலிக்க மாட்டார்கள். பெயர் கூறி அழைத்தால் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். பேச மாட்டார்கள். யாருடனும் ஒட்டி உறவாட மாட்டார்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள். தற்செயலாக, யாரோடாவது பேச நேர்ந்தாலும் எதிரில் பேசுபவரின் கண்களைப் பார்த்து பேச மாட்டார்கள். (அப்படி ஒருவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கிறார். எந்த நாடு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.)

இவர்களுக்கு 'மூட் ஸ்விங்ஸ்' அதிகமாக இருக்கும். சில நாட்களில் அதீத மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏன் என்று தெரியாது. சில நாட்களில் சோகமாக காணப்படுவார்கள். அதுவும் ஏன் என்று யாருக்கும் தெரியாது. அதிகம் கோபமடைவார்கள். எடுத்ததற்கெல்லாம் இரிடேட் ஆவார்கள். சில வேளை கையில் கிடைத்த பொருட்களைப் போட்டு உடைப்பார்கள். செல்லப்பிராணிகளை துன்புறுத்தி மகிழ்வார்கள்.

Echolalia எக்கோலாலியா" விரும்பிகளாக இருப்பார்கள் - அதாவது சொன்ன வார்த்தையையோ(சில வேளை தூசனமாக , சில வேளை பாடலில் முதல் வரியாக, அவர்கள் பேசும் ஒரு வசனமாக இது இருக்கும்), அதையே திரும்பத் திரும்ப கூறுவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் வாதிகள் திரும்ப திரும்ப தருகின்ற வாக்குறுதி போல, பெரும்பாலும், இதற்கு பொருளோ, காரணமோ இருக்காது.

உங்கள் குழந்தைகளிடமும் பின்வரும் அறிகுறிகளில் ஒன்றோ பலதோ இருந்தால், அது ஆட்டிசமாக இருக்கலாம். லாம். லாம்.லாம் என்பதை கவனிக்கவும்.

🌛எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.

🌛கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது. Avoiding eye contact

🌛பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.

🌛வழக்கமான குழந்தைகளின் விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.

🌛தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.

🌛சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.

🌛வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.

🌛தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.

🌛காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.

🌛வலியை உணராமல் இருப்பது.

🌛வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பது.

🌛பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.

🌛பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.

🌛எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.

🌛தன்னந்தனியே சிரித்துக் கொள்வது.

🌛சுற்றக்கூடிய, சுழலக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.

🌛வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.

🌛சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.

🌛நாளாந்த செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசவுகரியமாக உணருவது. ஒரே ப்ளேட், ஒரே கப் என, ஒரே இடம், ஒரே ஒடர் என பிடிவாதமாக இருப்பது.

🌛சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங் கூட்டத்தில் தனித்து இருப்பது. (சபையை தனிமையாக்கவும், தனிமையை சபையாக்கவும் உன்னால் ஒன்னுமா? என்று வைரமுத்து கேட்பது அது வேற ஸ்பெக்ட்றம் டிஸ்ஓடர் ப்ரென்ட்ஸ்)

இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படை அறிகுறிகள். இவைகள் இருந்தால் உங்கள் குழந்தைகளை உடனடியாக விஷயம் தெரிந்த வைத்தியரிடம், ஒரு சிறுவர் வைத்தியரிடம் காண்பிப்பது சிறந்தது.

👉ஆட்டிசம் உள்ள குழந்தைகளை என்ன செய்ய வேண்டும்? எப்படி கையாள வேண்டும்? அடித்து திருத்தலாமா?

ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனிப்பு மற்ற சாதாரண குழந்தைகளை விட கூடுதலாக தேவைப்படும். மிக அதிகமாக தேவைப்படும். மனிதத் தொடர்பு மிக அதிகமாக தேவைப்படும். ஸ்க்ரீன் டிவைஸ்கள், டிஜிட்டல் சாதனங்களிலிருந்து அவர்களை தூரமாக்க வேண்டும். இது தற்போதைய காலத்து பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. ஆட்டிசம் அடையாளம் காணப்பட்ட பிள்ளைகளை கையாள பொறுமை மிக அவசியம். அவசியம் என்பதை விட அத்தியாவசியம் என்று சொல்லலாம்.

இவர்களை மற்ற குழந்தைகளுடன் பழகுவதை ஊக்குவித்து உதவி செய்ய வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். மெனக்கட வேண்டும். அதுபோல, ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும். Occupational therapy அளிக்க வேண்டும்.

இந்த குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை சில முறை அல்லது பலமுறை கூடுதலாக விவரிக்க வேண்டும். படங்கள் மற்றும் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து உணர வைக்க வேண்டும். இது அவர்களின் கற்றல் ஆற்றல் மேம்பட உதவும்.

குழந்தைகளுக்கான மூளை நரம்பியல் மருத்துவர் Paediatric Neurologist, குழந்தை நல சமூக மருத்துவர் Community Paediatrician, குழந்தை நல மருத்துவர் Paediatrician போன்றவர்களகன் கண்காணிப்புடன்; Speech Therapy ஸ்பீச் தெரபி, Cognitive Behavioural தெரபி, Occupational தெரபி, பிசியோதெரபி, என பல்துறை வல்லுனர்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை Multi Disciplinary team தேவைப்படும். நீண்ட காலம் எடுக்கும். பொறுமையுடன் சிகிச்சைகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். இவர்களை அடிப்பதால் ஏசுவதால் எந்த பயனும் இல்லை.

👉ஓகே டாக்டர். என்ன காரணத்தினால் ஆட்டிசம் குழந்தைகளில் ஏற்படுகிறது என்று சொன்னால் நாங்கள் அவைகளை தவிர்க்கலாமே? அது பற்றி கொஞ்சம் கூறுங்களேன்.

🙂( நாம சொன்னா உடனே பாஞ்சி உழுந்து செஞ்சிடப்போறாக. சரி அதையும் சொல்லுவமே)

ஆட்டிசம் ஏற்பட இதுதான் காரணம் என குறிப்பாக எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியிலான காரணங்கள் வெறும் 0.5% க்கும் கீழே தான் இருக்கின்றன. இருந்தாலும் சராசரி வயதை(20-30) தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வது(80s 90sகிட்ஸ் உங்களை தான்). மோசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் (குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களிடம்), போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

அதுபோல குழந்தைகளின்
மூளையின் அமைப்பில் உள்ள மாறுபாடுகள் (Structural abnormalities), அல்லது மூளையின் வேதித்தனிமங்களில் (Chemical abnormalities) உள்ள குறைபாடுகளும் குழந்தையின் ஆட்டிசத்துக்கு காரணமாகின்றன. இவை கருவில் குழந்தை இருக்கும் போதும் மகப்பேறின் போதும் ஏற்புடும் சிக்கல்கள் காரணமாக உருவாகும். உதாரணமாக கழுத்தில் மாக் கொடி சுற்றுதல் (Cord around the neck), முதன்முதலாக வெளியேறும் மலம் குழந்தையின் சுவாசப்பாதைக்குள் நுழைதல்(Meconium Aspiration), குழந்தை பிறந்த உடன் அழாமல் இருப்பது, பின்னாளில் ஏற்படும் மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சினைகளால், மூளைக்கு பாதிப்பு ஏற்படல் போன்றவற்றால் ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

👉இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்

🙂ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதான், நோயல்ல. இதைச் சரியான காலத்தில் அடையாளம் கண்டு சிகிச்சை அளித்தால் குழந்தைகள் சாதாரண வாழ்க்கை வாழ்வார்கள். குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். அப்படி இல்லாமல், அடையாளம் காணாது, கண்டும் காணாமலும் விட்டுவிட்டால், அது போல, பொறுமையாக இருந்து சிகிச்சை அளிக்காமல் விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும்.

1943-ல் Dr. Leo Kanner ஆட்டிசம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். அவர் அந்த ஆய்வுக் கட்டுரைக்கு வைத்த தலைப்பு `பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம்’ (Autistic Disturbances of Affective Contact). அந்த தலைப்பு ஒன்றே இதை விளங்கப்படுத்த போதுமானது.

பிற் குறிப்பு- இந்த ஆக்கத்தை மேற்பார்வை செய்து தந்த, ஆட்டிசம் குறித்து இந்த துறையில் விஷேட பயிற்சி பெற்ற Dr Phirarthana Kamalanathan.
Consultant Community Paediatrician
அவர்களுக்கு கோடி நன்றிகள்

Address

Main Street
Addalaichenai
32500

Opening Hours

Monday 06:00 - 08:00
17:00 - 21:00
Tuesday 06:00 - 08:00
17:00 - 21:00
Wednesday 06:00 - 08:00
17:00 - 21:00
Thursday 06:00 - 17:00
17:00 - 21:00
Friday 06:00 - 08:00
17:00 - 21:00
Saturday 06:00 - 08:00
17:00 - 21:00
Sunday 06:00 - 08:00
17:00 - 21:00

Telephone

+94759450945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Zone Addalaichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Zone Addalaichenai:

Share

Category