25/02/2026
எகிப்தில் இருந்து தமிழகம் வரை
சுமேரிய நாகரிகம் எனப்படும் மெசபடோமிய மக்கள் கிமு 5000 வரை நாகரீகமடையாத மக்களாக வாழ்ந்து வந்தனர் அதன் பின்னான கி.மு 4500 இல் வேளாண்மை உலோகக் கலைகள் , சட்டம் ஒழுங்கு , உலக வணிகம் போன்ற துறைகளில் பெருவளர்ச்சி எய்தி சிறப்புற்றனர். இந்நாகரிகத்தைப் படைத்த மக்கள் சுமேரியாவிற்குரியவர்கள் அல்லர் .
மரக்கலங்களில் வந்த இவர்கள் பாரசீக வளைகுடாவிற்கு அப்பால் இந்திய நாகரிக நிலப்பகுதி ஒன்றில் இருந்தே அங்கு வந்திருக்க வேண்டு மென்பது ஆய்வாளர் கருத்து . இவர்கள் தமிழின மக்களே என்பதை இக் குழுவினரின் தலைவர்களது பெயர்களாகக் குறிப்பிடும் மூவரது பெயர்களும் உணர்த்துகின்றன .
எனவே , கிமு 4500 அளவில் சுமேரிய நாகரிகத்தின் அர்பாசட் கோபுரம் கட்ட வந்த மூன்று தமிழர் பெயர்களை வரலாறு எழுதிய பூசாரி Berrosess பெரோசஸ் என்பவர் குறிப்பிடுகிறார் .
அவர்களுடைய பெயர்கள் : (1) Oannes ஓவண்ணஸ் -- es என்ற பின்னொட்டு நீக்கினால் ஓவண்ண -- ஓவண்ணல் . (2) Otakon
ஓடக்கோன் -- ஓடம் = கப்பல் , படகு . கோன் = கப்பல் தலைவன் . ஓடக்கோன் இயல்பான பெயர் . (3) Andubaries அந்துபரியஸ் -- ies என்ற பின்னொட்டினை நீக்கினால் Andubar அந்துபர் -- அந்துவர் = அந்துவன் . இப்பெயர்கள் சுமேயாவுக்கு வந்து அவர்களுக்கு நாகரிகம் கற்பித்த தலைவர்களின் பெயர்கள் . இப்பெயர்கள் அவர்கள் தமிழர் தலைவர்களென்று உணர்த்துகின்றன . எனவே சுமேரியருக்கு நாகரிகம் கற்பித்தவர்கள் தமிழர்களே என்பது உறுதி .
மேலும் தென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சேஸ்(sayce) என்பவர் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார். அதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின் தலைநகர் ஊர்(Ur) என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில் சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு கேரள (பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக “சிந்து” என்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளது.
சிந்து என்ற சொல்லுக்கு பழந்தமிழில் துணி என்று பெயர். இன்றும் கன்னடத்திலும் துளுவிலும் துணியைக் குறிப்பிட சிந்து என்ற சொல் பயன்படுகிறது. எனவே பழந்தமிழகத்தில் இருந்து துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என அறிய முடிகிறது. மேலும் சிந்து என்பது ஆற்றிலிருந்து வந்த பெயர் அல்ல. துணிக்கான பண்டைய தமிழ் சொல்லிலிருந்து வந்த பெயர் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கார். (ஆதாரம்: தமிழக வரலாறு –மக்களும் பண்பாடும்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்; 51,52. பதிப்பு; 2008 & தமிழர் வரலாறு-பி.டி.சீனிவாச அய்யங்கார், தமிழ் பதிப்பு. பக்; 29.)
கி.மு.2600 இல் ஆட்சிபுரிந்த எகிப்திய நான்காவது வம்ச அரசன் மெர்னரே (MERNARE) என்பவனின் கீழ் பணிபுரிந்த அசுவான் (ASSWAN) இனத்து ஹர்க்குப்(HARKHWF) என்பவனின் கல்வெட்டில் “நறுமணப் புகைதரும் மெழுகு,கருங்காலிமரம், நவதானியம், சிறுத்தைப்புலி, தந்தம், தடிகள் மற்றும் பிற சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300 கழுதைகள் தெற்கு நுபியாவில்(SOUTHERN NOBIA) உள்ள யாம்(YAM) நாட்டிலிருந்து வந்திறங்கின” என்ற குறிப்பு உள்ளது. இதிலுள்ள கருங்காலி மரம், நவதானியம், சிறுத்தைப்புலி முதலியன தென்னிந்தியாவிலிருந்தே சென்றிருக்கக்கூடும் என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார் .( தமிழக வரலாறு பக்.31).
கி.மு.26 ஆம் நூற்றாண்டின் ஆறாவது அரச குடும்பத்தைச் சார்ந்த இரண்டாம் பெபி (PEppPEPI) என்பவனின் கீழ் பணிபுரிந்த செப்னி(Sebni) என்பவனுடைய குறிப்பில் மெழுக்கு உடைகள் (பருத்தி உடைகள்), யானைத்தந்தம், விலங்கின் தோல் முதலியன உள்ளன. அந்நாட்களில் தென்னிந்தியாவில்தான் பருத்தி ஆடைகள் நெய்யப்பட்டன என்றும் தந்தம் இந்தியத் தந்தமே என்றும், இரும்புப்பொருட்கள் (வாய்ச்சி, கோடரி, வாள்) பலவற்றை எகிப்து, சோமாலியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வந்தது என்றும், அது குறித்த பிற்காலத்திய ஆவணம் இருக்கிறது என்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகின்றார். (தமிழக வரலாறு பக்.32.)
தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரிய கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார் (பக்.32). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் ஸ்மித், ஸ்காப், கென்னடி, ஸ்வெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
இந்தியா பெருமளவில் இலவங்கம், மிளகு,முத்து முதலியவைகளை உற்பத்தி செய்தது என்றும் பருத்தி ஆடைகளை புதிய கற்காலம் முதலே நெய்து வந்தது என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்.(பக்.33.)
அரேபிய இடைத்தரகர்களால் எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் தென்னிந்தியப் பொருட்கள்தான் என்பதையும், தென்னிந்தியப் பரதவர்கள் அப்பண்டங்களை தங்களுடைய படகுகளில் ஏடனுக்கும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் கொண்டு சென்றனர் என்பதையும் தெரிவிக்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார்.(பக்.30,31)
யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ்(MMOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசஸ் அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.
மேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசஸ். (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).
ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர் களின் சமயத்தலைவரான மோசஸ் கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.
கி.மு. 1000 வாக்கில், இஸ்ரேலை ஆண்ட சாலமன்(SSOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா(SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம்(HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்சிஸ்(TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர்(OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன ( ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).
ஆக பண்டைய தமிழகம் இன்றைய தமிழகம் போன்று மூன்று மடங்கு நிலப்பரப்பு கொண்டதாகவும், இன்றைய தமிழகக் கடற்கரை போல மூன்று மடங்கு நீளம் கொண்டதாகவும் இருந்த, ஒரு பரந்த விரிந்த மாபெரும் பரப்பாகும். இன்றைய தமிழகம் முழுமையும், இன்றைய கேரள மாநிலம் முழுமையும், அதன் கடற்கரைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. இவை போக இன்றைய கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கோவா வரையிலான துளு நாடு முழுமையும் அதனை ஒட்டிய கடற்கரையும் (பழந்தமிழகத்தில் இதனை நன்னர்கள் ஆண்டனர்), கர்நாடகத்தின் தென் பகுதியும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள ஒரு சில மாவட்டங்களும், அதனை ஒட்டிய கடற்கரையும் பண்டைய தமிழகத்தில் இருந்தன.
இவை போக ஈழத்தீவும் அதன் ஓவிய நாகர்கள் வசித்த புகழ்பெற்ற ஓவிர் துறைமுகமும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. இந்த மயன் வழிவந்த ஓவிய நாகர்கள் சிறந்த சிற்பக்கலை வல்லுனர்கள் , இவர்களே தமிழருடைய ஓவியம்,சிற்பம்,கட்டிட கலை ஆகியவற்றுக்கான பேறறிவு பெற்றவர்கள்.இவர்களே தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர்கள் என கூறப்படுகின்றது. ஏனெனில் எழுத்து பயிற்சிக்கு முன்பாக இன்றும் ஆரம்ப பள்ளிகளில் முதலில் படங்கள் வரைவதும் அவற்றிற்கு வர்ணம் தீட்டுவதும் இன்றுவரை உள்ள கல்வி முறையாகும். இவர்களை ஆனைக்கோட்டை முத்திரை மயன் என குறிப்பிடும். ஆக ஒட்டு மொத்தமாக பண்டைய தமிழகத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும், கிட்டத்தட்ட 2500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையும் இருந்தன.
மேலும் கி.மு.3000 அசீரியர்களின் தொன்மக்கதை ஒன்றில் அவர்களது கடவுள் நல்லெண்ணையைக் குடித்த பின் தான் (எள் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்) உலகத்தைப் படைத்தார் என்ற பதிவு உள்ளது. இந்த எள் செடியின் மூலம்(ORIGIN) இந்தியத் துணைக்கண்டம் என்று கருதப்படுகிறது. ஆக அன்றே இந்தியாவிலிருந்து இந்த எண்ணெய் அசீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்றைய இந்திய நிலப்பரப்பு என அழைக்கப்படும் நிலப்பரப்பு அன்று பண்டு என அழைக்கப்பட்டது.
கி.மு.2500க்கு முந்திய எகிப்து அரசன் சியொப்ஸ் (Cheops) அவர்களின் மிகப்பெரிய பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு ஆசியக்கண்டத்து வாசனைப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வலிமையூட்டப்பட்டது என எகிப்திய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
கி.மு.2400 இல் சுமேரியாவில் கிராம்பு(Cloves) பயன்படுத்தப்பட்டதாக தொல்பொருள் ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராம்பு (வாசனைப்பொருள்) அன்று உலகிலேயே இந்தோனேசியாவில் உள்ள மொலுக்கஸ்(Moluccas) தீவில் மட்டுமே கிடைத்தது. இத்தீவிற்கு வாசனைத்தீவு என்றே பெயரிடப்பட்டுள்ளது. இத்தீவுடன் நடத்தப்பட்ட வணிகமே மிகப்பழமையான வணிகம் ஆகும்.
பாபிலோனிய மன்னன் ஹமுராபி (HHAMMURABI) (கி.மு.1792-1750) தனது சட்டத்தில் அறுவை மருத்துவத் தோல்விக்கு கடுமையான தண்டனை விதித்ததால் அங்கு மிகப்பெரிய அளவில் வாசனைத்திரவியங்களும் வாசனைப் பொருட்களும் தேவைப்பட்டன.
எகிப்திய ஆவணங்களின் படி கி.மு.1550 இல் மருத்துவத்திற்காகவும், உடலை அழிவிலிருந்து பாதுகாக்கவும் வாசனைத் திரவியங்கள் பயன் படுத்தப்பட்டன. இலவங்கப்பட்டை(Cassia), கருவேலம்பட்டை(Cinnamam) முதலியன மனித உடலை அழியாமல் பாதுகாக்க அவசியமாகக் கருதப்பட்டது. இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே கிடைக்கின்றன.
எகிப்தில் கி.மு.1473-1458 வரை ஆண்ட இளவரசி ஹட்செப்சுட்ஸ் (Hatcepsuts) , “ பண்ட்” என்ற இடத்திற்கு கப்பல் பயணம் செய்து கருவேலம்பட்டை, வாசனைப் பொருட்கள் போன்றவைகளை எகிப்துக்குக் கொண்டுவந்ததாக எகிப்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் கி.மு.1213 இல் இறந்த இரமேசஸ்-2(Ramasses) உடைய மம்மியின் இரு மூக்குத் துவாரங்களிலும் மிளகுப்பொருள்(Peppercorn) செருகி வைக்கப்பட்டிருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Source; E-Document-Trade,History of the spice trade, introduction page )
எகிப்தின் 17 ஆவது அரச வம்சம் நிறைய யானைத் தந்தங்களைப் பெற்ற தற்கான ஆவணங்கள் உள்ளன. மேலும் அதனால் ஆன பொருட்களான மேசை, நாற்காலி, சிலை போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. ஆப்பிரிக்கக் காடுகளை விட தென்னிந்தியக் காடுகளில் யானைகளைப் பிடிப்பது எளிது. எனவே இவை தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளன. எகிப்திய 18வது அரச வம்சம் மதிப்பு மிக்க கற்கள், வாசனைப் பொருட்கள், தந்தங்கள், தங்கம், கருவேலம்பட்டை, மனிதக்குரங்கு, குரங்கு, நாய், புலித்தோல் முதலியவற்றை அரேபியர்கள் மூலம் பெற்றதற்கான குறிப்புகள் உள்ளன.
இந்தியாவோடு அசீரியா கொண்ட வணிகத் தொடர்பு குறித்து, கிட்டிட்டி (Hittiti) அரசனான மிட்டானியுடைய (Mitani) கி.மு.14ஆம், 15ஆம் நூற்றாண்டை சார்ந்த கியூனிபார்ம் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. அதே காலத்தைச் சார்ந்த அசீரிய அரசனான டிக்ளத் பைல்சர்-3 (Tiglath pileser) உடைய நிம்ருட் (Nimrud) எழுத்துப் பொறிப்புகளில், இந்தியப் பொருட்களான துணிகள், நறுமணப் பொருட்கள் முதலியனவற்றை யக்கிம் (Yakim) என்ற அரசன், அசீரிய அரசனுக்கு பரிசாக வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன.
எனவே இந்த நீண்ட நெடிய கடல் வாணிபத் ஈடுபட்ட தமிழ் மக்களே சுமேரியருக்கு இறைவழிபாட்டு முறைகளை ஏற்படுத் தியவர்கள் . சுமேரிய வழி பாட்டில் முருக வழிபாடு சிறப்பிடம் பெற்றிருந்தது . முருகனை Baal -- பாலன் என்று அழைத்தனர் . சுமேரிய வரலாறு எழுதிய பூசாரி Berrosess கூட பாலன் கோயில் பூசாரிதான் . Baalan , என்ற பெயரின் அன் என்ற பெயராக்க விகுதியை அவர்கள் எழுதுவதில்லை ஆகவே , Baalan என்பதை Baal என்று அழைத்தனர் . இவ்வழிபாடு பின்னர் எகிப்து வரையிலும் பரவியது . பாலன் என்ற முருகனுக்கு தமிழர் வழக்கப் படி மலைமீது கோயில் கட்டி வழிபட்டனர் . மலைகள் இல்லாத சமவெளிகளில் மலையின் குறியீடாக மேடை அமைத்து அதன் மீது கோயிலைக் கட்டினர் . ஆகவேதான் ஆய்வாளர்கள் சுமேரியர் மலைப்பகுதியில் வாழ்ந்து அங்கிருந்து சமவெளிக்கு வந்தவர்கள் என்று கருதுகின்றனர்
இதேநிலைதான் சிந்துவெளியிலும் , தமிழகத்திலும் . முருக வழிபாடு தமிழர் மரபில் மலைக் கோயில் என்று அறிவோம் . காரணம் அவன் குறிஞ்சி நிலத்தலைவன் என்பது பண்பாடு . ஆகவேதான் முருகனை நாடன் என்றும் அழைக்கிறோம் . மலை மீது கோயில் கொண்ட முதல் இறைவன் முருகனே . முருகனின் கோயில்களே இன்று வேறுபல கடவுளின் மலைக்கோயில்களாக மாற்றி வழங்கப் பெறுகிறது . அது ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள முருக வழிபாடு தொடர்பான பொருட்கள் வாய்ப்பூட்டு அலகு , மயில் , காட்டுக் கோழி வழிபடு பொருட்கள் , வேல் போன்றவை சிந்து சமெளிகளிலும் கூட முருக வழி பாடு பெற்றிருந்ததை முதன்மையாக உணர்த்துகின்றன .
சிந்துவெளியிலும் முருக வழிபாடு மக்கள் வழிபாடாக இருந்தது . முருகன் அயிலன் -- வேலன் எனப்பட் டான் . அவன் சுமேரியாவைப் போல , தமிழகத்தைப் போல மலைக்கோயில் அமைத்து வழிபடப்பெற்றான் . தாய் கொற்றவையும் குறிப்பிடப்பெற்றுள்ளனர் . எடுத்துக்காட்டாக இதனை முத்திரை ஒன்றினூடாக காணலாம் .
1 ) மொகஞ்ச தரோ : 2290 .
# ஆ ய்ய ன ட மலய் கோயில் " மி
= மி " கோயில் மலய் டனய்ய ஆ
= மீ " கோயில் மலய் தனய்ய ஆ
மீ = மேலான , உயர்ந்த
கோயில் மலய் = மலைக்கோயில் .
டனய்ய = தனய்ய = தனையன் .
( ட > த ஒலிமாற்றம் )
தனையன் = மகன் .
ஆ = இறைவனுக்குக் கொடைப் பசு .
முத்திரை கோயில் மலய் தனய என்கிறது . கோயில் மலயில் உறையும் தனய்யன் என்கிறது முத்திரை . தனயன் = மகன் . இறைவி கொற்றவை ஆகியோரின் மகனே முருகன் என்று நாமறிவோம் . கொற்றவைச் சிறுவ ( மகன் ) என்பது தமிழர் வழிபாட்டு வழக்கு . இவ்வழக்கு சுமேரிய , எகிப்திய , சிந்துநதிதீர சமகால நாகரிகங்களிலும் அதனினும் மேம்பட்ட்ட ஈழம் உட்பட்ட பண்டைய தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.