20/01/2026
பிரமிடுகள் பற்றிக் கேட்டால்,
அவை 4000 ஆண்டுகளுக்கு மேலாக இப்புவியில் நிலைத்து வரும் மனிதர்கள் எழுப்பிய அதிசயம் என்று பலரும் கூறுவர்.
எனினும் பிரமிடு தனது இருப்பில் மாறுமா?
அப்படி மாறினால் அதுவும் அதிசயம் தானே...
அப்படி ஒரு அதிசய நிகழ்வுதான் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆம்.. அமெரிக்க விவசாயத் துறையினாலும் சுகாதாரத்துறையினாலும் 2025-2030 ஆம் ஆண்டிற்கான
"அமெரிக்கர்களுக்கான உணவு சார்ந்த பரிந்துரை" தான் இப்போது ஹாட் டாப்பிக் .
அப்படி என்ன அந்த பிரமிடில் மாற்றம்?
தானியங்கள் தான் பிரதான உணவு என்ற பிம்பத்தை உடைக்குமாறு,
இதுவரை பிரமிடின்
அடிப்படை அடித்தளமாக இருந்த தானியம் சார்ந்த உணவுகளை,
பிரமிடைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டு
கீழே கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.
தானியங்கள் - மாவுச்சத்து நிரம்பியவை .
அதிலும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை( நாம் உண்ணும் அரிசி/ கோதுமை / மைதா/ சிறுதானியம் பாலிஷ் செய்யப்பட்டவை தான்)
உண்பதைக் குறைத்துக் கொள்ளவும் முழு தானியங்களாகவே இருப்பினும் அவற்றை அளவுடன் உண்ணவும் கூறுகிறது இந்தப் பரிந்துரை.
அமெரிக்க சுகாதாரத் துறை செயலாளர் திரு.ஆர்.எஃப். கென்னடி ஜூனியர் கூறுகிறார்
"இனி உண்மையான உணவை உண்ணுங்கள்.
இது அமெரிக்க அரசின் உணவுக் கொள்கையை ரீசெட் செய்யும் முனைப்பாகும்" என்று பில்ட் அப் ஏற்றுகிறார்.
என்னைப் பொருத்தவரை
உணவு - மருத்துவம் ஆகியவற்றில் அறிவியல் மட்டும் இருந்திருந்தால், உலகம் இப்போதை விட சுபிக்ஷமாக இருந்திருக்கும். ஆனால் இவற்றில் அரசியல் தன் மூக்கை நுழைத்தமையால் தான் பல இன்னல்களும் வந்து சேர்ந்தன.
இவர்களும் உணவிலும் மருத்துவத்திலும் அரசியலையே புகுத்துகிறார்கள்.
அடுத்து புரதம் சார்ந்த வழிகாட்டுதல்கள் -
இதுவரை ஒரு நபர் அவரது எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் உட்கொண்டால் சரி என்று இருந்த நிலையில், தற்போது
ஒரு கிலோவுக்கு 1.2 முதல் 1.6 கிராம் வரை புரதம் உட்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளது.
இந்தப் புரதத்தை ,
கால்நடை மாமிசம்
பறவையின மாமிசம்
முட்டைகள்
கடல்சார் உணவுகள்
பயறு
கடலை
பருப்பு
பால் பொருட்கள்
சோயா
போன்றவற்றால் அடைந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வேளை உணவிலும் புரதச்சத்து இருக்க வேண்டும்.
சும்மா... நாலு இட்லி ஒரு வடை என்றோ
மூனு பரோட்டா தொட்டுக்க சால்னா என்றோ
ரெண்டு குண்டான் சோறு கூட ஊறுகாய் என்றோ காலத்தை ஓட்டாமல்
உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து விட்டு அதற்கு ஈடாக
முட்டை /மாமிசம் / மீன் / சோயா / டோஃபு/ பனீர் போன்றவற்றை மூன்று வேளையும் பகுத்துண்ண வேண்டும் என்கிறது.
இதற்கு முந்தைய பரிந்துரைகள் யாவும்
பாலில் உள்ள கொழுப்பை நீக்கிவிட்டுப் பருகக் கூறி வந்ததை எதிர்த்து,
இந்தப் பரிந்துரையில்
முழுக் கொழுப்புப் பாலைப் பருகுங்கள். ஆனால் அதில் சர்க்கரை சேர்க்காதீர்கள் என அக்கறையுடன் கூறுகிறது.
இனி கொழுப்பு கெட்ட வார்த்தையல்ல.
சூரியவம்சம் சின்னராசு போல ஒதுக்கி வைக்காமல்
அதையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாமிசம்/ இறைச்சி
அதில் சிவப்பு வெள்ளை என்று நிற வேற்றுமை பார்க்காமல் சாப்பிடுங்கள்.
முட்டை , மீன் , நட்ஸ், விதைகள், ஒலிவ எண்ணெய், அவகாடோ போன்றவற்றையும் ஒதுக்காமல் இனி சாப்பிடலாம்.
எண்ணெய்க்கு
ஆலிவ் ஆயில் அல்லது
வெண்ணெய் / பீஃப் டாலோ கூட உபயோகியுங்கள்.
உணவை டீப் ஃப்ரை ( எண்ணெயில் அமிழ்த்தி பொரிக்காதீர்கள்)
பேக் செய்யுங்கள்
க்ரில் செய்யுங்கள்
வதக்குங்கள்
ஷாலோ ஃப்ரை செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறது.
இவ்வளவு மேம்பட்ட கருத்துகளை கொழுப்பு குறித்து கூறியும்,
சுகாதாரச் செயலாளர்
"நிறைவுற்ற கொழுப்பின் மீது நாங்கள் தொடுத்த போரை நிறுத்திக் கொள்கிறோம்" என்று அறிவித்திருக்கிறார்.
அதாவது போரில் தோல்வி அடைந்து விட்டோம் என்பதைத் தான் அமெரிக்கா எப்போதும் இவ்வாறு அறிவிப்பது வாடிக்கை தான்.
கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக நிறைவுற்ற கொழுப்பின் மீது வெற்றுக் களங்கம் சுமத்தி போர் புரிந்து அதில் தோல்வி கண்டுள்ளது அமெரிக்கா.
இறைச்சி சாப்பிடுங்கள் ஆனால் அது கூட சோறு / கோதுமை / இனிப்பு இல்லாமல் சாப்பிடுங்கள் என்று கூறியிருப்பது அருமை.
எனினும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக,
இன்னும் இந்த சேச்சுரேட்டட் ஃபேட் எனும் நிறைவுற்ற கொழுப்பு குறித்த பூச்சாண்டியை நிறுத்திய பாடில்லை.
மொத்த கலோரி கணக்கில் 10% க்கு மிகாமல் நிறைவுற்ற கொழுப்பு ( இறைச்சி/ வெண்ணெய் ) ஆகியன இருக்குமாறு பார்த்துக் கொள்ளச் சொல்கிறது. இது ஒரு முரணான வழிகாட்டுதல்.
அடுத்து,
சர்க்கரை மீது போர் தொடுக்கிறோம் என்று சூளுரைத்து
தினசரி ஒவ்வொரு வேளை உணவுக்கும்
10 கிராம் சர்க்கரைக்கு மிகாமல் எடுத்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறது.
மொத்தமாக இனிப்பை நிறுத்துங்கள் என்று கூறியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.
மதுவைக் குறித்த வழிகாட்டுதல்களிலும்
மொத்தமாக நிறுத்தினால் தான் உருப்படுவீங்க என்று கூறுவதை விட்டு விட்டு , கொஞ்சம் சரக்க கொறச்சுக்கோங்கப்பா என்று கூறியிருப்பது போதாமையின் வெளிப்பாடு.
காய்கறிகளையும் கனிகளையும் ஒரு நாள் முழுமைக்கும் சாப்பிடுங்கள். மூன்று வேளை உணவிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகளையும் கனிகளையும் அதன் இயற்கை வடிவத்திலேயே உண்ணுங்கள்.
பழச்சாறாக அருந்துவதைத் தவிர்க்கவும். அப்படி அருந்தினால் அளவுடன் அருந்தவும்.
அதில் இனிப்பு சேர்க்காமல் அருந்த முயற்சி செய்யவும் என்று அருமையான அறிவுரைகள் வழங்கியுள்ளது.
நொதித்த உணவுகளான கிம்சி, கெபிர், மிசோ, சவுர் க்ராட் ஆகியவற்றை உண்ணுங்கள். அதனால் குடலின் நல்ல பாக்டீரியா அதிகமாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள், பாலீஷ் செய்த தானியங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்/ குறைக்கவும்.
இப்படியாக
தனது கொழுப்பு உண்ணுதல் குறித்த இதுநாள் வரையிலான வழிகாட்டுதல்களில் இருந்து "ஆரோக்கியமான கொழுப்பு உண்ணலாம்" என்று யூ டர்ன் அடித்தாலும்
உண்மை ஒரு நாள் வெல்லத் தானே வேண்டும் என்ற நம் பல நாள் ஆசை நிறைவேறியது மகிழ்ச்சி.
அமெரிக்காவில்
மூன்றில் ஒரு டீன் ஏஜ் வயதினருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலை இருப்பதாகவும்,
இளம் வயதினரில் 18.5% பேருக்கு கல்லீரல் கொழுப்பு படிதல் நோய் இருப்பதும்,
20% சிறார் சிறுமியர் உடல் பருமனால் அவதியுறுவதும்
மிக முக்கியமாக 77% இளையோர், இந்த தொற்றா நோய்களின் தாக்கத்தால் ராணுவத்துக்கு தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும், இதனால் போர் சூழ்நிலைகளில் நாட்டின் தயார் நிலை மற்றும் முன்னேற்பாடுகளுக்கு இடர் ஏற்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் அமெரிக்காவின் காலம் கடந்த கண்விழிப்பாயினும்
இந்த அறிவுரை மாற்றங்களை நான் உள்ளபடி வரவேற்கிறேன்.
ஆயினும்,
மீண்டும் கூறுகிறேன்.
அறிவியல் பேச வேண்டிய இடங்களில் அரசியல் பேசப்படுவதை நான் விரும்பவதில்லை.
ஆயினும், அறிவியலை முன்னிலைப்படுத்துவதும் பின்னால் தள்ளுவதும் ஆகிய இரண்டையுமே அரசியல் நினைத்தால் செய்யலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
அரசியல் விஷயத்தை தள்ளி வைத்து விட்டு
அறிவியல் ரீதியாக இந்த அறிவுரைகளை அணுகியிருக்கிறேன்
இதில் நமக்கும் நிச்சயம் செய்திகள் உண்டு.
தலைகீழான பிரமிடின்
விளைவாக
நமது புவியின் தற்கால உணவு சார் நம்பிக்கைகளும் மாறட்டுமாக...
மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது
"அனைத்தும் மாறும்"
என்பதே பாரபட்சமற்ற
உலக நியதி.
வரலாறு நெடுகிலும்
அதுவே நமக்குப் பாடமாகக் கிடைக்கிறது.
பலமானது
பலகீனமானது
என்று பாரபட்சமில்லாமல் அனைத்துமே இவ்வுலகில் மாற்றத்திற்குட்பட்டவையே.
மாறுவோம்.
மாற்றுவோம்.
நன்றி