
30/08/2021
கிருஷ்ணன் முற்றிலும் யாரோடும் ஒப்பிட முடியாதவன்;
மிகவும் வித்தியாசமானவன்.
கிருஷ்ணன் மிகப்புராதன காலத்தவனாக இருந்தாலும்,
அவன் எதிர்காலத்திற்கும் சொந்தமானவனாக, உண்மையான எதிர்காலத்தவனாக இருப்பதில்தான், அவனுடைய தனித்தன்மையே அடங்கி இருக்கின்றது.
மனிதன், இனிமேல்தான் அந்த உயரத்திற்கு வளர வேண்டும்.
அங்கேதான், அவன் கிருஷ்ணனின் சம காலத்தவன் ஆக முடியும்.
கண்ணன் இன்னும் நம் புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவனாகத்தான் இருக்கிறான்
நம்முடைய முழு வரலாற்றிலும், பரிபூரண உயரத்தையும், ஆழத்தையும் எட்டிய ஒரே ஒரு மாமனிதன் கிருஷ்ணன்தான்.
இருந்தும்கூட, அவன் அப்படியொன்றும் இறுக்கமானவனாகவோ, சோகமானவனாகவோ, கண்ணீர் சிந்துகின்றவனாகவோ இல்லை.
பெரும்பாலும், ஆன்மீகவாதிகளின் பிரதான குணம் என்னவென்றால், வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றோடிப் போனவர் போலவும், வாழ்க்கையை விட்டு விலகிப் போனவர் போலவும், அவர், மந்தமானவராகவும், இறுக்கமானவராகவும், துக்கமுடையவராகவும் காணப்படுவார்.
அப்படிப்பட்ட நீண்ட ஞானிகளின் வரிசையில் கிருஷ்ணன் மட்டுமே ஆடியபடியும், பாடியபடியும், சிரித்தபடியும் வருகிறான்.
ஆனந்தமாகச் சிரிக்கும் மதம், வாழ்க்கையை ஒப்புக் கொள்ளுகிற மதம், அதன் முழுப் பரிமாணத்தோடு இனிமேல்தான் பிறக்க வேண்டும்... அப்படி பிறந்த முதல் மனிதன்
கிருஷ்ணன்..
இன்று வரை, ஒவ்வொரு மதமும் வாழ்க்கையை இரண்டு பாகமாகப் பிரித்து வைத்திருக்கிறது.
ஒன்றை ஏற்றுக் கொள்கிறது; மற்றதை மறுக்கிறது.
ஆனால், கிருஷ்ணன் மட்டுமே வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறான்.
இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலம்தான் கிருஷ்ணனின் முழுப்பலனையும் பெற முடியும்.
அதனால்தான், இந்திய நாடு கிருஷ்ணனைப் பூரணமான கடவுள் அவதாரமாகப் போற்றுகிறது
நாம் அனுபவிக்கும் துயரங்கள், எதிர்மறைத்தன்மை, அழுத்தப்பட்ட உணர்வுகள், நிபந்தனைகள் என்னும் பெரிய பாலைவனத்தில், ஆடிப்பாடி ஆனந்தப்படும் ஒரு சிறிய பாலைவனச் சோலையாக அவன் திகழ்கிறான்
இன்று வரை, மனித மனம், வாழ்க்கையைத் துண்டு துணுக்காகவே பார்த்துப் பழகி விட்டது;
அதை தர்க்கத்திற்குரியதாகவும் (முரண்பட்டதாகவும்) பார்க்கிறது.
ஆன்மீகவாதி உடலை மறுக்கிறான்; ஆனால் உயிரை மதிக்கிறான்.
இதில் பரிதாபம் என்னவென்றால், அவன் தன் உடலையும், உயிரையும் இரு கூறாக்கி, இவற்றிடையே மோதலை உருவாக்கி விடுகிறான்.
இந்த உலகை மறுக்கிறான் ஆனால் இன்னொரு உலகை ஏற்கிறான்.
இப்படி இரண்டிற்கும் இடையில் ஒரு பகைமையை ஏற்படுத்தி விடுகிறான்.
நாம், நம் உடலை மறுத்தால் நம் வாழ்க்கை, இயல்பாகவே துக்கமும், துன்பமும் நிறைந்ததாக மாறி விடும்.
நம்முடைய வாழ்க்கையின் சகல சத்தும் சாரமுமாக இருப்பவை, உடல் சார்ந்த ஆரோக்கியமும், உத்வேகமும், நுண் உணர்வுகளும், அழகும், சங்கீதமும்தான்.
ஆகவே, உடலை வெறுத்து ஒதுக்கும் ஒரு மதம், ரத்தசோகை பிடித்ததாகவும், நோய்ப்பட்டதாகவும்தான் இருக்க முடியும்...
இதனால்கிருஷ்ணனுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது.
இறந்த கால மதங்களுக்கும், எதிர்கால மதங்களுக்கும் நடுவே
ஒருபெரிய புரட்சி ஆரம்பமாகிறது.
வாழ்க்கையை, அதன் சகல அம்சங்களோடும், பருவங்களோடும், வண்ணங்களோடும் அவன் ஏற்றுக் கொள்கிறான்.
அவன் மட்டும், எதையும் தேர்ந்தெடுப்பதில்லை;
ஒரு நிபந்தனையின்றி வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறான்.
காதலை அவன் தவிர்ப்பதில்லை; ஒரு மனிதன் என்ற முறையில் அவன் பெண்களை விட்டு ஓடிப்போவதில்லை.
கடவுளை அறிந்தவன், அனுபவித்தவன் என்ற முறையில், அவன் மட்டுமே, போரைக் கண்டு முகம் திரும்பி ஓடிப் போகாதவனாக இருக்கிறான்.
அன்பும், அருளும் நிறைந்தவனாக அவன் இருந்தும் கூட, போரை ஏற்றுப் போரிடும் தைரியம் அவனிடம் இருக்கின்றது. அவன் இதயம் சுத்தமான அகிம்சை குணம் உடையது.
அப்படியிருந்தும், தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, வன்முறையின் கொடுமைக்குள்ளும், நெருப்புக்குள்ளும் அவன் பாய்ந்து செல்கிறான்.
அவன் தேனை ஏற்றுக் கொள்கிறவன்தான் என்றாலும் அவனுக்கு விஷத்தைக் கண்டால் பயமில்லை.
கிருஷ்ணன், வாழ்க்கையின் இருமைப் பண்பையும், தர்க்க முரணையும் முழுசாக ஏற்றுக் கொள்வதால், அவன் இருமையைக் கடந்து அப்பால் செல்கிறான்.
ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு மறுபகுதியை மறுக்கிற முரண்பாடு உங்களுக்குள் உள்ளவரைக்கும், நாம் சொல்லுகிறோமே அந்த ஆழ்நிலையை நாம் அடைய முடியாது.
ஆழ்நிலை என்பது தேர்வு செய்யாமல், இரு பகுதிகளையும் ஒன்றாக ஏற்றுக் கொள்கிற போதுதான், முழுமையை ஒப்புக் கொள்கிற போதுதான், சாத்தியமாகும்.
அதனால்தான், கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற, மிக முக்கியத்துவமுடையவன் ஆகிறான்.
அவனுடைய இந்த முக்கியத்துவம், காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும்.
மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும், பகட்டும் மங்கிக் கொண்டே செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் போது, கிருஷ்ணனின் சுடர், தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து, அதன் சிகரத்தின் உச்சியில் நின்று ஒளிவீசும்...
* #ஓஷோ*