
23/06/2025
🩸 காத்தான்குடியில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு 🩸
- எம், ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி (ஜுன் 14) காத்தான்குடி தள வித்தியாசாலை மற்றும் குருதிக் கொடையாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பும், இரத்தான முகாமும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி தள வித்தியாசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி விசேட வைத்திய நிபுணர் திருமதி நிஷாந்தினி திஷாந்தன் மற்றும் விசேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மஹ்ஜுத், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் ராசாரட்னம், காத்தான்குடி இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் அலிமா றகுமான், டாக்டர் நித்யா, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸ்ருத்தீன் குருதிக் கொடையாளர் சம்மேள பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
2004ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற 58வது உலக சுகாதார மாநாட்டில் தன்னார்வ இரத்த தானத்தின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் கருதி குருதிக் கொடை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குருதிக் கொடை வழங்குவோரை கெளரவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தினை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் திகதியை கொண்டாடி வருகின்றது.
இத்தினமானது ஏ பீ ஓ இரத்தக் குழு அமைப்பை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞாணி கார்ல் லாண்டஸ் டெய்னெரின் பிறந்த நாளாக அமைவதும் சிறப்பம்சமாகும்.
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை முன்வைத்து குருதிக் கொடையை ஊக்குவித்து வருகின்றது. இந்த ஆண்டு "இரத்தம் வழங்குவோம், நம்பிக்கை கொடுப்போம், உயிர் காக்க ஒன்றினைவோம்" எனும் தொனிப் பொருளில் குருதிக் கொடையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு தேவையான 100 வீதம் பாதுகாப்பான குருதி தேசிய இரத்தவங்கி ஊடாக வழங்கப்படுகின்றது. ஆசியாவிலேயே சிறந்த இரத்த வங்கிச் சேவை இடம் பெறும் நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.
உலகளவில் வெறும் 70 நாடுகளில் மாத்திரமே இத்தகைய சேவை இடம் பெறுகின்றது.
அறிவியல் வளர்ச்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த மனிதனால் இன்று வரை செயற்கையாக குருதியை உருவாக்க முடியவில்லை அதனால் இதை ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்கநக்கு பயன்படுத்த வேண்டியுள்ளதால் குருதிக் கொடை முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்த வகைபில் காத்தான்குடி குருதிக்கொடையாளர் சம்மேளனம் 8 தடவை அல்லது அதற்கு மேல் இரத்த தானம் வழங்கிய ஆண்களும், 4 அல்லது அதற்கு மேல் உதிரம் வழங்கிய பெண் குருதிக் கொடையாளர்களினதும், ஏற்பாட்டு நிறுவனங்களினதும் உன்னத பணியை பாராட்டி தேசிய குதிக் கொடையாளர் தினத்தில் அவர்களை கெளரவித்து நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தது.
இலங்கையில் 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.