25/01/2023
⭕ எக்ஸ்பைரி ⭕
‘எக்ஸ்பைரி’ என்கிற ஆங்கில வார்த்தைக்கு ‘மரணம்’ அல்லது ‘இறப்பு’ என்றொரு அர்த்தம் காட்டுகிறது அகராதி.
உயிரையும் ஆரோக்கியத்தையும் காக்கும் மருந்துகளில் தொடங்கி, நாம் குடிக்கிற தண்ணீர், சாப்பிடுகிற உணவு, அவற்றில் சேர்க்கிற பொருள்கள், காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொன்றுக்குமே காலாவதி காலம் என ஒன்று உண்டு. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ‘ #எக்ஸ்பைரி’
பற்றியதுதான் இந்த அலசல்.
மற்றதைப் பற்றித் தெரியுமோ, இல்லையோ, மருந்துகளுக்கு ‘காலாவதி’ உண்டு என்பது பலரும் அறிந்ததே! மருந்து வாங்கும் போதும், ஒவ்வொரு முறை அதை உபயோகிக்கிற போதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியைக் கவனிக்க வேண்டியது மிக மிகமுக்கியம்.
காலாவதி தேதி முடிந்த பிறகும் 3 மாதங்களுக்கு அந்த மருந்தை உபயோகிக்கலாம் என்கிற பரவலான மூட நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது!
காலாவதி தேதி என்றால் என்ன? அது எப்படிக் கணக்கிடப்படுகிறது? காலாவதியான மருந்துகளை எடுத்துக்கொள்வதால் என்னாகும்? இப்படி சகல கேள்விகளுக்குமான விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...
⭕‘‘மருந்துகளோட காலாவதி தேதி என்பது மருந்தியல் விஞ்ஞான முறைப்படி நிர்ணயிக்கப்படுது. அதாவது ஒரு மருந்தோட வீரியத் தன்மையைப் பாதுகாக்க, அந்த மருந்துக்கு ஸ்திரத் தன்மையைக் கொடுக்கக் கூடிய, கிரியை உண்டாக்காத சில பொருள்களை அதில்சேர்த்துத் தயாரிப்பாங்க. வெப்பத்தன்மையால பாதிக்கப்படற மருந்துகளை ‘தெர்மோலயபிள்’ (Thermolabile) னும், வெப்பத்தைத் தாங்கக் கூடிய மருந்துகளை ‘தெர்மோஸ்டேபிள்’ (Thermostable) னும் சொல்றோம். முதல் வகை மருந்துகளை வெளிச்சம் இல்லாத இருட்டான இடங்கள்லதான் வைக்கணும். அடுத்ததை வெளிச்சத்துலயும் வைக்கலாம். இதை அளவுகோல்களா வச்சுதான், ஒவ்வொரு மருந்தும் எத்தனை காலம் பாதுகாப்பாக இருக்கும்னு கணக்கிட்டு, அதுக்கான காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படுது’’ என்கிறார் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் பள்ளியின் இயக்குனரும், தலைவருமான பேராசிரியர் ரவிச்சந்திரன்.
‘⭕‘காலாவதி தேதி முடிஞ்ச பிறகு, மருந்துகள், தன்னோட வீரியத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமா இழக்க ஆரம்பிக்கும். அதுக்குக் காரணம், அந்த மருந்துகள்ல உள்ள மூலக்கூறுகள்ல ஏற்படற மாற்றம்! அதுக்குப் பிறகு, அந்த மருந்துகள், நாம எதிர்பார்க்கிற பலன்களைக் கொடுக்கறதில்லை. உதாரணத்துக்கு காலாவதி ஆகாத ஒரு மாத்திரை, நூறு சதவிகிதம் பலன் தரும்னா, காலாவதியான மாத்திரை, முழுப்பலனைத் தராது. காலாவதியான மருந்துகளை எடுத்துக்கிறதால, நாம எதிர்பார்க்காத பக்க விளைவுகளும் வரலாம். இதுக்காகத்தான் ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் - 1940/1945’ காலாவதியான மருந்துகளைப் பத்தின விதிகளை வரையறுத்துச் சொல்லியிருக்கு. காலாவதியான மருந்துகளை, காலாவதி தேதிக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம். காலாவதியான மருந்துகளை, விற்பனைக்காக வச்சிருக்கிற மற்ற மருந்துகளிடமிருந்து பிரிச்சு, ஒரு அட்டைப்பெட்டிக்குள்ள போட்டு, ‘காலாவதியானவை - விற்பனைக்கல்ல’ என்ற குறிப்போட வைக்கணும்னு அந்தச் சட்டம் சொல்லுது. காலாவதியான மருந்துகளை உபயோகிக்கக்கூடாதுன்னு சொல்ற சட்டம், இதுவரை அந்த மருந்துகளை எப்படி அப்புறப்படுத்தறதுங்கிறதுக்கான எந்த வழிமுறைகளையும் வரையறுக்காததுதான் வருத்தமான விஷயம்...’’ என்கிறார் ரவிச்சந்திரன்.
⭕‘‘காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாப்பிடறது எவ்வளவு தவறான விஷயமோ, அதைவிட மோசமானது, அந்த மருந்துகளை வீட்ல வச்சிருக்கிறது. தேவையில்லாத மருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தறதுதான் பாதுகாப்பானது’’ என்கிற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் மார்பு நோய் நிபுணர் வி.எஸ்.அனந்தன்.
⭕‘‘மாத்திரை, பவுடர் வகைகள், திரவம் மற்றும் இன்ஜெக்ஷன் வகையறாக்கள்னு ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு விதமா அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். மாத்திரைகளை, வாங்கின கடைக்காரங்கக் கிட்டயே திருப்பிக் கொடுத்துடலாம். அப்படிக் கொடுக்கிறதுல சிக்கல் இருக்கிறதா நினைக்கிறவங்க, அதையெல்லாம் ஒரு பாலிதீன் கவருக்குள்ள போட்டுக் கட்டி, குப்பைத்தொட்டியில போட்டுடலாம். சிரப் மற்றும் திரவ வடிவ மருந்துகளை கழிவறையில கொட்டிடலாம். இன்ஜெக்ஷனா இருந்தா, அதை உடைச்சு, அப்புறப்படுத்தணும்’’ என்கிற டாக்டர், காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதிலும் அக்கறை அவசியம் என்கிறார்.
⭕‘‘உங்க குழந்தைக்கு இருமல்னு டாக்டரை பார்க்க* ங்க. சிரப் எழுதிக் கொடுக்கறார். ரெண்டு நாளோ, மூணு நாளோ கொடுத்ததுமே, குழந்தைக்கு நல்லாயிடுது. சிரப்பை எடுத்து அலமாரியில வச்சிட* ங்க. அந்த மருந்து எக்ஸ்பைரி ஆக இன்னும் ஒரு வருஷம் இருக்குன்னு வச்சுப்போம். மறுபடி 6 மாசம் கழிச்சு, உங்க குழந்தைக்கு இருமல் வரும்போது, அதான் எக்ஸ்பைரி ஆகலையேன்னு அதே மருந்தை எடுத்துக் கொடுப்பீங்க. அது ரொம்பத் தப்பு. சில மருந்துகளை திறந்துட்டா, அதோட எக்ஸ்பைரி தேதி மாறிடும். அதுலயும் சில பவுடர் வகை மருந்துகள், குறிப்பா குழந்தைகளுக்கான ஆன்டிபயாடிக் பவுடர்களை தண்ணீர்ல கலந்து கொடுக்கச் சொல்வாங்க. அப்படி தண்ணீர் கலந்துட்டாலே, அதை 1 வாரத்துக்குள்ள உபயோகிச்சிடணும். திரவ வடிவ மருந்துகள் வாங்கும்போது ஒரு கலர்ல இருந்து, பிறகு நிறம் மாறினா, எக்ஸ்பைரி ஆக நிறைய காலம் இருந்தாலுமே அதை உபயோகிக்கக் கூடாது. சில மாத்திரைகள் ஃபாயில் பேப்பர்ல சுத்தி வரும். ஒரு சில மாத்திரையை திறக்கும்போதே உடைஞ்சு, பவுடர் மாதிரி கொட்டும். அப்படி இருந்தா, அதை உபயோகிக்கக் கூடாது.
⭕எந்த மருந்தா இருந்தாலும், அதை சூரியவெளிச்சம் படற மாதிரியான இடத்துல வைக்கவே கூடாது. ஏசி ரூம் சிறந்தது. அந்த வசதியில்லாதவங்க, நிழலான இடத்துல வைக்கலாம். ஃப்ரிட்ஜ்ல (ஃப்ரீசர்ல வைக்கக் கூடாது) 4 டிகிரியில வைக்கலாம். வெயில் படற இடத்துல வைக்கிற போது, மருந்துகள் இன்னும் சீக்கிரமே காலாவதியாகும்...’’ - மருந்துகளை அலட்சியமாகக் கையாள்பவர்களை ‘அலர்ட்’ செய்கிறது டாக்டரின் அட்வைஸ்.
⭕கைவசம் இருக்கட்டுமே என்கிற நினைப்பில், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிகளுக்கான மாத்திரைகளை டஜன் கணக்கில் வாங்கி ஸ்டாக் வைப்பது பலரது வழக்கம். மாத்திரைப் பட்டியின் ஒரு ஓரத்தில் அது காலாவதியாகும் தேதி அச்சிடப் பட்டிருக்கும். அதைக் கவனிக்காமல், அந்த இடத்தைக் கிழித்து, மாத்திரையை எடுத்திருப்பார்கள். அடுத்த முறை உபயோகிக்கும் போது, காலாவதி தேதி கண்ணில் தெரியாது. ‘இப்பதானே வாங்கினோம்... அதுக்குள்ளயா எக்ஸ்பையரி ஆகியிருக்கும்’ என்கிற நினைப்பில் அதைத் தீரும் வரை உபயோகிப்பார்கள், பல நேரங்களில் அது காலாவதியானதே
தெரியாமல்!
⭕அப்படி காலாவதியான மருந்துகளை எடுத்துக் கொள்வதால் என்னாகும்?
‘‘முதல் விஷயம் அதோட ஆற்றல் குறைஞ்சிருக்கும். உடம்புக்கு முடியலைன்னு டாக்டர்கிட்ட போயிருப்பீங்க. மலேரியாவா இருக்கலாம்னு டாக்டர் அதுக்கான மருந்துகளைக் கொடுத்திருப்பார். ஆனா, நீங்க எடுத்துக்கிட்ட மலேரியா மருந்து காலாவதி ஆனதா இருந்தா, அது வேலை செய்யாது. மலேரியா குணமாகாது. மறுபடி டாக்டர்கிட்ட போவீங்க. ‘நீங்க கொடுத்த மருந்து கேட்கலை’ம்பீங்க. காலாவதி மருந்து எடுத்துக்கிட்ட விஷயம் டாக்டருக்கு தெரியாது. அவர் மண்டையை உடைச்சுக்கிட்டு, ஒருவேளை அது டைஃபாய்டா இருக்குமோன்னு வேற மருந்துகளையும் டெஸ்ட்டுகளையும் எழுதிக் கொடுப்பார். உங்க நேரம், பணம்னு எல்லாம் விரயமாகும்.
⭕காலாவதியான மருந்துகளை எடுத்துக்கிறதால சிலருக்கு சரும அலர்ஜி வரலாம். அரிதா சிலருக்கு கல்லீரல், சிறுநீரகம் மாதிரி உள் உறுப்புகள் பாதிக்கப்படலாம். எக்ஸ்பைரி ஆனது தெரியாம, ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கிட்டா, பெரிய பாதிப்புகள் வந்துடாது. அப்படி எடுத்துக்கிட்டது தெரிஞ்சா, உடனே டாக்டர்கிட்ட அதைச் சொல்லி, அட்வைஸ் கேட்கறது பாதுகாப்பானது’’ என்கிறார் பொது மருத்துவர் அருணாச்சலம்.
மளிகைச் சாமான்கள், அழகு சாதனங்கள், பாக்கெட் உணவுகள், காய்கறிகள், பழங்கள், இத்யாதி இத்யாதிகளுக்கும் காலாவதி காலம் உண்டு. அவை பற்றி அடுத்த இதழில்!
- ஆர்.வைதேகி
⭕ஆயுர்வேத மருந்துகளுக்கும் ஆயுள் உண்டா?
‘காலாவதி என்பது ஆங்கில மருந்துகளுக்கு மட்டும்தான், ஆயுர்வேத, சித்த மருந்துகளுக்குக் கிடையாது’ என்பதும் பலரது எண்ணம். அது உண்மையல்ல என்பதே உண்மை!
‘‘ஆயுர்வேத மருந்துத் தயாரிப்புல பல வகைகள் உண்டு. அந்தத் தயாரிப்பைப் பொறுத்ததுதான் காலாவதி. பொதுவா ஆயுர்வேத மருந்துகள்ல ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கறதில்லை. சிலதுல ப்ரிசர்வேட்டிவ் தவிர்க்க முடியாததாகவும் இருக்கு. மருந்தோட வடிவம், அதுல சேர்க்கப்படற பொருள்கள்னு பலதையும் பார்த்துதான், அது எத்தனை நாளைக்குள்ள உபயோகிக்கப்படணுங்கிறதை நாங்க சொல்வோம்” என்கிறார் ஆயுர்வேதமருத்துவர் பரத் நரேந்திரா.
‘‘கஷாயம், சூர்ணம், மாத்திரை, லேகியம், க்ருதம், தைலம், ஆசவம், அரிஷ்டம்... இப்படி ஆயுர்வேத மருந்துகள்ல பல வடிவங்கள் இருக்கு. பெரும்பாலும் இதுல நெய், சுத்தமான நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், தேன், வெல்லம்னு இயற்கையான ப்ரிசர்வேட்டிவ் சேர்த்துத் தயாரிக்கறதால, அதுவே அந்த மருந்துகளை கெட்டுப் போகாம வைக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான். மருந்துகள்லயே இத்தனை காலத்துக்குள்ள உபயோகிக்கணும்னு போட்டிருக்கும் அல்லது டாக்டர் சொல்வார். ஈரம் படாம, உலர்வான இடத்துல, டைட்டா மூடி வச்சு உபயோகிக்கிறது பாதுகாப்பானது. குறிப்பிட்ட காலம் முடிஞ்ச பிறகு பவுடர் வடிவ மருந்து கட்டிதட்டும். லேகியத்துல பூஞ்சை காளான் வரும். க்ருதம்ல பூச்சி வரும். நிறமும் வாசனையும் மாறும். காலாவதிக்கான இந்த அறிகுறிகள் தெரியலைன்னாலும், டாக்டர் அறிவுறுத்தின காலத்துக்குப் பிறகு, மருந்துகளை எடுத்துக்கிறது நல்லதில்லை” என்கிறார் அவர்.
⭕எப்படிக் கண்டுபிடிப்பது?
* நீங்கள் வாங்கும் மாத்திரை மற்றும் மருந்து பாட்டில்களின் மேல் அதன் காலாவதி தேதி இவற்றில் ஏதேனும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
expiry
expiry date
expires
exp
exp date
use by
use before
* சில மருந்துகளுக்குக் குறுகிய கால காலாவதி கெடு குறிப்பிடப்பட்டிருக்கும். குழந்தைகளுக்குத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கக் கூடிய ஆன்டிபயாடிக் பவுடர்கள், கண்களுக்கான டிராப்ஸ் போன்றவை இந்த ரகம். இவற்றை ஒரு வாரம் முதல் அதிகபட்சம் 1 மாதத்துக்குள் உபயோகிக்கச் சொல்லி, உறையின் மீது குறிப்பிட்டிருப்பதை கவனிக்கலாம்.